காணாமல்போனோர் உயிருடன் உள்ளனர் எனும் உணர்விலேயே உறவுகள் அரசுக்கு கடப்பாடு உள்ளது என்கிறார் :பிரதமர் ரணில்
யுத்தத்தின் போதும் யுத்தத்தின் பின்னரும் காணாமல் போனவர்கள் இன்னும் உயிருடன் இருக்கின்றனர் என்ற உணர்விலேயே அவர்களது உறவினர்கள் இருந்து வருகின்றனர். ஆகவே அவர்களுக்கு நடந்தது என்ன என்பது தொடர்பிலும் அது குறித்து கண்டறிய வேண்டியதன் கடப்பாடு தொடர்பிலும் நல்லாட்சி அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
விகிதாசார தேர்தல் முறைமையில் விளைவாக வடக்கில் அதிகமான தமிழர் பிரதிநிதித்துவங்களும் தெற்கில் அதிகமான சிங்கள பிரதிநிதித்துவங்களும் உருவாகின எனவே சுமுகமான அரசியல் சூழல் ஒன்றை உருவாக்க வேண்டிய தேவையும் உருவாகி உள்ளது என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.
பம்பலப்பிட்டி ஓசோ ஹோட்டலில் யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம விருந்தினராக பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கூறியதாவது,
2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி ஏற்பட்ட மாற்றத்திற்கு தமிழ் மக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தேர்ந்தெடுத்து பாரிய வரலாற்று மாற்றத்தினை ஏற்படுத்தினர்.
இலங்கையிலுள்ள அனைத்து மக்கள் குழுக்களையும் இலங்கையர் என்ற கண்ணோட்டத்திலேயே பார்க்கிறோம். தந்தை செல்வநாயகத்தின் காலத்தில் குறிப்பாக 1979 ஆம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம், 2009 ஆம் ஆண்டு வரையில் யுத்தம் தொடரவும் இன முரண்பாடுகள் வளர்ச்சியடைவதற்கும் காரணமாக இருந்தது.
மேலும் இலங்கையில் ஏற்பட்ட சிவில் யுத்தம் வெறுமனே இனங்களுக்கிடையே மட்டுமல்ல. இதனை விடவும் இலங்கைக்குள் அதாவது வடக்கு பகுதியில் வாழும் மக்களிடையே மற்றும் தென்பகுதியில் வாழும் மக்களுக்கிடையிலும் பயங்கரவாதம் பரவியிருந்தது.
குறிப்பாக தென்பகுதியில் 1977,1979 ஆம் ஆண்டுகளில் வடக்கு கிழக்கை பொறுத்தமட்டில் பல சந்ததியினருக்கிடையில் யுத்தம் மற்றும் அதன் பாதிப்புகள் பரவியிருந்தது. ஐக்கிய தேசிய கட்சி வடக்கு மற்றும் தெற்கு மக்களுக்கிடையில் சுமுகமான உறவை ஏற்படுத்துவதில் அக்கறையுடன் செயற்பட்டு வந்துள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு எதிர்க்கட்சியின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.மேலும் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு என்பது நீண்டகால பொறிமுறையை கொண்டதாக காணப்படுகின்றது.
இதில் இரண்டு பிரதான பிரச்சினைகள் காணப்படுகின்றன. முதலாவதாக யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும் அதன் பின்னரான காலத்திலும் காணாமல் போன மக்கள் என்ன ஆனார்கள் என்பது தொடர்பிலும் அவர்களை கண்டறிய வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் நல்லாட்சி அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகின்றது.
காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகத்தின் மூலம் யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் காணாமல் போன தங்களது உறவுகள் இன்னும் உயிருடன் இருக்கின்றார்கள் எனும் உணர்ச்சிபூர்வமான நிலையில் மக்கள் உள்ளனர். எனவே நாம் இது தொடர்பில் கூர்மையாக ஆராய வேண்டும்.
அடுத்ததாக உண்மையை கண்டறிதல் மற்றம் நல்லிணக்க ஆணைக்குழு மூலம் நல்லிணக்க செயற்பாடுகளில் உண்மையை கண்டறிவதன் அவசியம் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்படவுள்ளது. சமூகத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சமயங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கு அனைத்துமதத் தலைவர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இதற்கு சமயச்சபைகள் அதிக பங்களிப்பு செலுத்துகின்றன.
சில சந்தர்ப்பங்களில் சட்ட நடவடிக்கை எடுத்தல் என்பது பொருத்தமானதாக இருக்கின்ற போதும் அது அனைத்து சந்தர்ப்பங்களிலும் பொருந்தாது எனவே சமூக தலைவர்கள் இதற்கான முக்கிய பங்குதாரர்களாக உள்ளனர்.
கடந்த காலங்களில் புலிகளுடனான யுத்தம் சிவிலியன்களுடனான மோதல் மற்றும் விடுதலைப்புலிகள் தென்பகுதியில் உள்ள முக்கியமான அரசியல் தலைவர்களை இலக்கு வைத்தனர், முஸ்லிம் பள்ளிவாசல்கள் ஊடாக மோதல் என ஒரு காலகட்டத்தில் யாருடன் யார் மோதிக்கொள்கின்றார்கள் என்பதே தெரியாமல் போயிருந்தது. தமிழர்கள் சிங்களவர்களை பற்றியும் சிங்களவர்கள் தமிழர்களை பற்றியும் குறைகூறி நூல்களை எழுதுகின்றனர்.
இவ்வகையான கடந்தகால அனுபவங்களை வைத்து மக்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும். மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள மாறுபட்ட கருத்துக்களை இல்லாதொழிக்க வேண்டும். அது மட்டுமல்லாது தற்போது இலங்கையின் சனத்தொகை பரம்பலில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் வடக்கு கிழக்கு பகுதிகளில் சனத்தொகை சடுதியாக குறைகின்ற போது மேல்மாகாணத்தில் தமிழ் மக்களின் சனப் பரம்பல் சடுதியாக அதிகரிக்கின்றது.
குறிப்பாக வத்தளையிலிருந்து ரத்மலானை மற்றும் கொழும்பு தேர்தல் தொகுதிஇ கொலன்னாவ, காலி முகத்திடலை அண்டிய பகுதிகளில் தமிழ் மக்களின் சனப்பரம்பல் கணிசமான அதிகரிப்பை காட்டுகின்றது. மேலும் கொழும்பில் வெள்ளவத்தையிலேயே நிலத்துக்கான பெறுமதி மிகவும் அதிகரித்து காணப்படுகின்றது. இதுவும் சனத்தொகை பரம்பலில் முக்கியமான தாக்கம் செலுத்தும் விடயமாகும்.
மேலும் கிராமப் புறங்களில் இருந்தும் அதிகளவான மக்கள் நகரத்தை நோக்கி படையெடுக்கின்றனர். குறிப்பாக கொழும்பு, கண்டி, மாத்தளை ஆகிய பகுதிகளுக்கு அதிகளவில் இடம்பெயர்கின்றனர். மலையகத்தில் லயன் அறையில் வாழும் மக்கள் தோட்டப்புறங்களுக்கு வெளியே வாழ்வதனை அதிகம் விரும்புகின்றனர். அத்தோடு மலையகத்தில் உள்ள இளைஞர்கள் தற்போது லயன் அறைகளில் வாழ விரும்புவதில்லை. பெரும்பாலான மக்கள் தற்போது அம்பாந்தோட்டைக்கு இடம்பெயர்கின்றனர்.
அத்தோடு நாடுமுழுவதும் ஹோட்டல் துறைகளை மேம்படுத்தி பல்வேறு அபிவிருத்தி திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. அதனால் நாட்டில் மிகப்பெரிய இடம்பெயர்வுகள் இடம்பெறுகின்றன. மேலும் இலங்கை மக்களிடையே பாரம்பரிய கலாசாரம் வேரூன்றிய பொழுதும் வெகுசன ஊடக கலாசாரமும் அதிகளவில் பரவியுள்ளது.
எமது நாட்டவர் ஆடை அணியும் விதம், பேச்சுவழக்கு, உள்ளிட்ட விடயங்கள் ஆகியவற்றிலும் பொலிவூட், ஹொலிவூட் பாணியில் மாறிவருகின்றது. இதுவே உலக மயமாக்கலின் விளைவாகும். அதேநேரம் இன்று நினைத்த மாத்திரத்தில் எங்கும் சென்று மீளத்திரும்புகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டமாக அரசியலமைப்பின் பக்கம் பார்க்கின்ற போது தேர்தல் முறைமையில் விகிதாசார பிரதிநிதித்துவ முறைமை பாரிய தாக்கத்தினை செலுத்தியது. மேலும் தற்போது தொகுதிவாரி முறையின் அவசியம் தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக விகிதாசார தேர்தல் முறைமையில் வெற்றிபெற்ற கட்சி மட்டுமே முழுமையான ஆதிக்கத்தை செலுத்தும். குறிப்பாக இவ்விரு தேர்தல் முறைகளிலுமே ஆசனப்பங்கீடு தொடர்பில் காணப்படுகின்ற பிரச்சினைகள் மக்கள் பிரதிநிதித்துவத்தினை முறையாக ஒழுங்குபடுத்த முடியாதுள்ளது. எனவே தான் தற்போது ஜேர்மனிய கலப்பு பாணியிலான பிரதிநிதித்துவ முறைமை தொடர்பில் அதிகம் கவனம் செலுத்துகின்றோம்.
அத்துடன் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை தொடர்பில் உருவாகியுள்ள பிரசாரங்களுக்கு மத்தியில் பிரதமர் தலைமையிலான அமைச்சரவை அதிகார முறைமையின் தேவை தொடர்பிலும் குறித்த தேர்தல் முறைமை தெரிவு அதிகம் தாக்கம் செலுத்தும். இதுவே வடக்கு பகுதியில் தமிழரும் தென் பகுதியில் சிங்களவரும் ஆதிக்கம் செலுத்த காரணமாக அமைந்தது.
அதிகார பரவலாக்கத்தை நோக்கும் போது நாம் மூன்றாம் நிலை அதிகார பரவலாக்கம் குறித்து யோசிக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பு தொடர்பிலும் எல்லைகளை கடந்த இலங்கையின் மாகாண மட்டத்திலான அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் உள்ளூராட்சி மன்றங்களை கடந்து அதிகார பரவலாக்கத்திற்கு தேவையான செயற்பாடுகளை முன்னெடுக்க உள்ளோம்.
இந்நிலையில் நாம் சகல நாடுகளுடனும் சுமுகமான உறவைப் பேண எத்தனிக்கின்றோம். நாம் புதிய இலங்கையை உருவாக்குவதற்கான முயற்சிகளை இலங்கையின் பொருளாதாரம் 500 பில்லியனை தாண்டிச் செல்கின்றமை வரவேற்கத்தக்கது.
தெற்கிலுள்ள மக்கள் வடக்கிற்கு செல்லவும் வடக்கில் உள்ளவர்கள் தெற்கிற்கு செல்லவும் சுமுகமான அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் தேவை ஏற்பட்டுள்ளது.
அதனை அடையும் முயற்சியினையே தற்போது மேற்கொண்டு வருகின்றோம். எனவே பாடசாலைக ளுக்கிடையில் புதிய புரிந்துணர்வின் அடிப்படையிலான கலாசாரம் ஒன்று உருவாக்கப்படும்.
இதன் அடிப்படை யிலேயே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்குஇ கிழக்கு பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றோம். குறிப்பாக ஹாட்லி கல்லூரி யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் கடுமையான பாதிப்புக்களை எதிர் கொண்டிருந்தது. அந்நேரத்தில் நான் குறித்த பாடசாலைக்கு விஜயம் செய்திருந்த போது அப்பாடசாலையில் உயர்தர பரீட்சைக்கு தோற்றுவதற்கான எவ்வித சூழ்நிலையும் காணப்படவில்லை. ஆனாலும் அவ்வருடத்தில் குறித்த பாடசாலை தேசிய ரீதியில் சாதனை செய்திருந்தது.
எனவே நாம் கல்வியின் மூலமே அபிவிருத்தியடைய முடியும் அதற்கான கடுமையான பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply