எம்.ஜி.ஆர். மீது உண்மையான அன்பு கொண்டவர்களுக்கு வாழ்த்துகள்: மு.க.ஸ்டாலின் அறிக்கை

அன்பும், பாசமும் காட்டி தன்னிடம் ஊக்கம் ஊட்டியவர் என்றும், எம்.ஜி.ஆர். மீது உண்மையான அன்பு கொண்டிருப்போருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற எதிர்க் கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 

தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா 17.01.2017-ல் நிறைவு பெறுகிறது. தொடக்க நிலையில் திரைவாழ்விலும் பொதுவாழ்விலும் தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் இணைந்து பயணித்தவர். அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்தபோதும் எம்.ஜி.ஆருக்கும், கருணாநிதிக்கும் இடையே ஆழமான நட்பு தொடர்ந்தது.

 

தன்னுடன் இருந்தவர்கள் கருணாநிதி என்று குறிப்பிட்ட போதெல்லாம் அவர்களைக் கண்டித்துத் திருத்தியவர் எம்.ஜி.ஆர். என்பதை மறந்துவிட முடியாது. மறைந்த எம்.ஜி.ஆர். தனிப்பட்ட முறையில் என்னிடமும் அன்பும், பாசமும் காட்டி ஊக்கம் ஊட்டியவர். தி.மு.க. கொள்கை பிரசார நாடகத்தில் நான் நடித்தபோது, அதற்குத் தலைமை வகித்து வாழ்த்துரை வழங்கி என்னை உற்சாகப்படுத்தியதை என்னால் மறக்க முடியாது.

 

அரசியல் நாகரிகமும், பண்பாடும் போற்றும் தலைவர் கருணாநிதி, மறைந்த எம்.ஜி. ஆரின் நினைவிடத்தை சீரும் சிறப்புமாக அமைத்தும், தமிழ்நாடு மருத்துவ பல்கலைக்கழகத்திற்கும், தரமணியில் உள்ள திரைப்பட நகருக்கும் எம்.ஜி.ஆரின் பெயரை சூட்டியதையும் இந்த நேரத்தில் நினைத்துப்பார்க்கிறேன்.

 

மறைந்த எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு பெறும் இந்த நேரத்தில் அவரது நினைவைப்போற்றி, எந்தவித பலனும் எதிர்பாராமலும் அனுபவிக்காமலும் அவர் மீது உண்மையான அன்பு கொண்டிருப்போருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதுடன், எம்.ஜி.ஆரின் நினைவைப் போற்றுகிறேன்.

 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply