இன அரசியல் சர்ச்சையில் சிக்கிக்கொள்ள வேண்டாம்: ரஜினிக்கு திருமாவளவன் எச்சரிக்கை!

இலங்கைத் தமிழர்களுக்கு வீடு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரஜினி இலங்கைக்குச் செல்ல வேண்டாம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஜினி – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.O-வின் (எந்திரன் படத்தின் 2-ம் பாகம்) படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை ரூ. 350 கோடி செலவில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் லைக்கா நிறுவனம் ரூ. 22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 150 வீடுகளை இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கவுள்ளது. லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜாவின் தாயார் ஞானாம்பிகா பெயரில் ஞானம் அறக்கட்டளை சார்பில் இலங்கை வவுனியாவின் சின்ன டம்பன் கிராமம், புளியங்குளம் பகுதிகளில் இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளை உரியவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி யாழ்ப்பாணத்தில் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வீடுகளை வழங்க உள்ளார் ரஜினி.

இலங்கை வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள்.

இலங்கைத் தமிழர்கள் தொடர்புடைய நிகழ்ச்சியில் ரஜினி கலந்துகொள்வதால் இந்த நிகழ்ச்சி மீது அதிக கவனம் குவிந்துள்ளது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் ரஜினி கலந்துகொள்வதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

இலங்கைத் தமிழர்களுக்கு வீடு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரஜினி இலங்கைக்குச் செல்லவேண்டாம். லைக்காவுடனான தனது நட்பைப் படம் பண்ணுவதோடு நிறுத்திக்கொள்ளட்டும். இன அரசியல் சர்ச்சையில் ரஜினி சிக்கிக்கொள்ள வேண்டாம். ரஜினியை வைத்து லைக்கா நிறுவனம், இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் திறப்பது ஏமாற்று வேலை என்று கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply