மீனவர்களை விடுவிக்க மோடிக்கு மீண்டுமொரு கடிதம் : முதலமைச்சர் எடப்பாடி

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 72 பேரையும் கடந்த காலங்களில், மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 148 படகுகளையும் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு, நேற்று எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“புதுக்கோட்டை மாவட்டம், முத்தனேந்தல் மீன்பிடி தளத்திலிருந்து, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள், நாட்டுப் படகில் (வல்லம்) கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அவர்களை, இலங்கை கடற்படையினர், கடந்த 16ஆம் திகதி கைது செய்து, கங்கேசன்துறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பாக்கு நீரிணையில், கில் வலைகளைக் கொண்டு, நாட்டுப் படகுகளில், நூற்றாண்டு காலமாக மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். ஆனால், அவர்களையும்கூட, இலங்கை கடற்படையினர் கைது செய்கின்றனர்.

“அதேபோல, நாகப்பட்டினம் மீன்பிடி தளத்திலிருந்து விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற 8 மீனவர்களை, இலங்கை கடற்படையினர், கடந்த ஜூலை 21ஆம் திகதி கைது செய்துள்ளனர்.

“இலங்கை கடற்படையினர், தொடர்ந்து இன்னல்களை அளித்து வந்தாலும், தமிழக மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரப் பிரச்சினையில், சுமூகமான தீர்வு ஏற்பட வேண்டும் என்ற மனநிலையில் உள்ளனர். ஆனால், இலங்கை அரசாங்கம் தமிழக மீனவர்களுக்குத் தொடர்ந்து இன்னல்களை அளிப்பதோடு, மீனவர்களையும் அவர்களது படகுகளையும், சிறைபிடித்து வருகிறது.

“கச்சத்தீவை, இந்தியா திரும்ப பெறுவதும் சர்வதேசக் கடல் எல்லையை மறுவறையரை செய்தவதும்தான், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாகும். அப்போதுதான், தமிழக மீனவர்கள், தங்கள் தொழிலை நிம்மதியாக மேற்கொள்ள முடியும்.

“எனவே, நீண்ட நாட்களாக நீடித்துவரும் இந்தப் பிரச்சினைக்கு மத்திய அரசாங்கம் நிரந்தர தீர்வை ஏற்படுத்தித் தர வேண்டும். மேலும், கடந்த 16 மற்றும் 21ஆம் திகதிகளில் கைது செய்யப்பட்ட 12 மீனவர்கள், 2 படகுகள் உட்பட, மொத்தம் 72 மீனவர்கள், 148 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply