தி.மு.க., அ.தி.மு.க.வை ஒழிக்கவே ரஜினி, கமலை இழுக்கிறார்கள்: திருமாவளவன்

வருகிற 27-ந் தேதி தி.மு.க. ஒருங்கிணைக்கிற மனித சங்கிலி போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகளும் பங்கேற்கிறாம். மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கைக்கான தகுதித் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. முன் எடுத்து செல்லும் இந்த அறப்போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் தமிழகம் தழுவிய அளவில் பங்கேற்கிறோம். கடலூரில் நான் கலந்து கொள்கிறேன்.

போராட்ட களத்தில் பங்கேற்பது தேர்தல் கூட்டணிக்காகத்தான் என்று பொருளாகாது. விவசாயிகள் பிரச்சினையானாலும், கதிராமங்கலம்-நெடுவாசல் பிரச்சினையானாலும், நீட் தேர்வு எதிர்ப்பு ஆனாலும் மாநில அரசுக்கு எதிரான போராட்டங்கள் மட்டுமின்றி மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களாகவும் உள்ளன.

எனவே அனைத்து எதிர்கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டிய தேவையை உணர்ந்து திராவிட முன்னேற்ற கழகத்தின் அழைப்பை ஏற்று இந்த மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொள்கிறோம்.

தி.மு.க.வை பொறுத்தவரையில் தனித்தே தேர்தலை சந்திக்க வேண்டும் என்கிற வகையில் செயல்படுவதாகத் தான் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

உதயசூரியன் சின்னத்தில் நிற்கும் கட்சிகளை மட்டுமே கூட்டணியில் சேர்த்து கொள்ளும் என்று கடந்த தேர்தலில் இருந்தே கூறப்படுகிறது.

எனவே தற்போதைக்கு மக்கள் பிரச்சினைகள் அடிப்படையில் தி.மு.க.வுடன் இணைந்து இருப்பதை வைத்து கொண்டு தி.மு.க. ஒரு மெகா கூட்டணி அமைக்கும் என்று சொல்ல முடியாது. அதற்கான ஒரு அவசியமும் தி.மு.க.விற்கு இல்லை என்ற நிலைதான் உள்ளது.

மக்கள் நலக்கூட்டியக்கம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதுதான் விடுதலை சிறுத்தைகளின் விருப்பமாகும். இடது சாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய 3 கட்சிகளும் அண்மையில் இணைந்து ஜி.எஸ்.டி. வரி விதிப்பை எதிர்த்து போராட்டம் நடத்தி இருக்கிறோம். அதே அடிப்படையில் இந்த 3 கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியமானதாக கருதுகிறோம்.

மேலும் உடன்பாடுள்ள இஸ்லாமிய அமைப்புகளையும், தமிழ் தேசிய அமைப்பு களையும் இணைத்து மக்கள் நலக்கூட்டியக்கத்தை வலுப்படுத்துவது நல்லது என்று கருதுகிறோம்.

 

அ.தி.மு.க. தலைமை பலவீனப்பட்டு இருக்கிற நிலையில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றவர்கள் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு எதிரானவர்களின் நோக்கமாக உள்ளது. இந்த நிலையில் மக்கள் நலக்கூட்டியக்கத்தை வலுப்படுத்தினால் மக்களால் அது ஒரு மாற்று சக்தியாக அங்கீகரிக்கப்படும் என்று நம்புகிறேன்.

இந்திய தேசத்திற்கும், இந்திய அரசியல் அமைப்பிற்கும் எதிரான வகையில் வகுப்புவாத அரசியல் தலைவிரித்தாடும் நிலையில் தமிழகத்தையும் அவர்கள் குறி வைத்து இருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே தி.மு.க., காங்கிரஸ், மக்கள் நலக்கூட்டியக்கம், இதர மதசார்பற்ற கட்சிகள் ஆகிய அனைவரும் ஒரே அணியில் திரண்டால்தான் தமிழகத்தில் வகுப்புவாத அரசியலை வேறூன்ற விடாமல் தடுக்க முடியும். அத்துடன் திரைப்பட கவர்ச்சி அரசியலில் இருந்தும் தமிழகத்தை காப்பாற்ற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply