அந்த அறிவு எனக்காவது இருக்க வேண்டாமா? பவளவிழாவில் கமல் ஆவேசம்

முரசொலி பவளவிழா வாழ்த்தரங்கம் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைப்பெற்றது. இவ்விழாவில், இந்து என்.ராம், நக்கீரன் ஆசிரியர் நக்கீரகோபால், நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து, விகடன் பா.சீனிவாசன், தினமலர் ரமேஷ், தினமணி வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தினர்.விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் திமுக செயல்தலைவரும், முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலருமான மு.க.ஸ்டாலின் நினைவுப்பரிசு வழங்கினார்.

கமல் இவ்விழாவில் பேசியபோது, ‘’ரஜினி இந்த விழாவிற்கு வருகிறாரா என்று ஒரு கேள்வி கேட்டேன். ஆமாம் வருகிறார் என்றார் ஸ்டாலின். அவரும் பேசுகிறாரா என்றேன். இல்லை, மேடைக்கு கீழே அமர்ந்து பார்வையாளராக இருப்பதாக சொல்லிவிட்டார் என்றார். அப்படியானால் நானும் கீழேயே அமர்ந்துகொள்கிறேன் என்றேன். எதுவும் சொல்லவந்தால் கையை பிடித்து இழுத்துக்கொள்வார் ரஜினி என்ற தைரியம் இருந்தது. விழாவுக்கு அழைத்துவிட்டு ஸ்டாலின் சென்றபிறகு கண்ணாடியில் என்னை பார்த்துக்கொண்டேன். அடேய் முட்டாள் எவ்வளவு பெரிய வாய்ப்பை இழக்கிறாய். இந்த விழா எப்படிப்பட்டது என்பதை முதலில் புரிந்துகொள் என்றது. தற்காப்பு முக்கியம் அல்ல; தன்மானம்தான் முக்கியம். ஏன் அப்படி சொல்கிறேன் என்றால் இந்த மேடையில் அமர்ந்திருக்கும் ஒரு அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.

அந்த மேடையில் அமர்ந்து கழகத்தில் சேரப்போகிறீர்களா என்று டுவிட்டரில் கேள்வி கேட்கிறார்கள். சேருவதாக இருந்தால் 1983ல் கலைஞர் டெலகிராம் மூலம் அழைப்பு விடுத்தபோதே சேர்ந்திருப்பேன். கலைஞரின் பெருந்தன்மை என்னவென்றால் அதன்பிறகு இதுவரையிலும் அதுபற்றி கேட்கவில்லை. அந்த மரியாதை இந்த மேடையிலும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்திருக்கிறேன்.

விகடன் பா.சீனிவாசன் பேசும்போது பூனூல் பத்திரிகை என்று கலைஞர் விமர்சனம் செய்ததை சொன்னார். அவரே இந்த விழாவுக்கு மகிழ்வோடு வந்திருக்கும்போது பூனூலே இல்லாத கலைஞானி இந்த விழாவுக்கு வருவதில் என்ன ஆச்சரியம்? ஏன் இப்படி பதறுகிறீர்கள்? அரசியல் பற்று விமர்சனம் செய்வீர்களா என்றால் அதற்கு இதுவா மேடை. அந்த அறிவு எனக்காவது இருக்க வேண்டாமா? ’’என்று ஆவேசப்பட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply