ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார், உப ஜனாதிபதி எமர்ஸன் மனன்கவ்யா
சிம்பாவேயின் முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபே எவரும் எதிர்பாராத வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, புதிய ஜனாதிபதியாக முன்னாள் உப ஜனாதிபதி எமர்ஸன் மனன்கவ்யா, நாளை வெள்ளிக்கிழமை 24 பதவியேற்கவுள்ளார். ரொபேர்ட் முகாபேயால் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்த எமர்ஸன், இரு வாரங்களுக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறி தென் ஆபிரிக்காவில் தஞ்சமடைந்திருந்தார்.
எமர்ஸனின் பணி நீக்கமானது, சிம்பாவே அரசாங்கத்தில் இராணுவம் தலையீடு செய்யவும், முகாபேயின் 37 வருட கால ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்படவும், வழிவகை செய்தது.
93 வயதான முகாபே, தனது பதவியை இராஜினாமா செய்தமை தொடர்பான செய்தி வெளியானதும் அந்நாட்டு மக்கள் அதனை ஒரு விழாவாகக் கொண்டாடினர்.
இந்நிலையில் தனது அரசியல் தந்திரோபாய நடவடிக்கைகள் தொடர்பில் ‘முதலை’ என அழைக்கப்படும், முன்னாள் உப ஜனாதிபதி எமர்ஸன், புதிய தேர்தல் இடம்பெறும் வரை முகாபேயின் பதவியை வகிக்கவுள்ளதாக ஆளும் ஸானு-பி.எப். கட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அந்நாட்டின் புதிய தேர்தல்கள் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் எமர்ஸன் நாளை வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள வைபவத்தில் ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கத்தால் செயற்படுத்தப்படும் சிம்பாப்வே ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply