கடற்படை முகாமை தாழ்வுப்பாட்டு கிராம மக்கள் முற்றுகை

மன்னார் தாழ்வுபாட்டு கடலில் மீன் பிடிக்கச் சென்ற சுமார் 25 கடல் தொழிலாளர்களை கடற்படையினர் கைது செய்ததால் கிராம மக்கள் தாழ்வுபாட்டு கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியைச் சூழ்ந்து கொண்டமையினால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மன்னார் தாழ்வுபாட்டு கிராம மீனவர்கள் நேற்று (04/12/2017) திங்கட்கிழமை காலை வழமை போல் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். குறித்த கடல் தொழிலாளர்கள் தமது பாரம்பரிய தொழிலாக கடந்த 30 வருடங்களுக்கு மேலாக சுருக்கு வலையினை பயன்படுத்தியே மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தாழ்வுப்பாட்டு பிரதேசத்தில் இருந்து தொழிலுக்குச் சென்ற 5 படகுகளைச் சேர்ந்த 25 கடல் தொழிலாளர்கள் கடற்படையினர் கடலில் வைத்து கைது செய்து தாழ்வுப்பாட்டு கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

கடல் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதனை அறிந்து கொண்ட தாழ்வுப்பாட்டு கிராமமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு தாழ்வுப்பாட்டு கடற்கரை முகாமை நோக்கி சென்ற மக்கள் குறித்த கடல் தொழிலாளர்கள் கைது தொடர்பில் தமது எதிர்ப்பினை தெரிவித்திருந்ததோடு அவர்களை விடுதலை செய்யுமாறும் கோரி இருந்தனர்.

குறித்த கிராமத்தைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சூழ்ந்து கொண்டமையினால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டிருந்தது.

அதனைத்தொடர்ந் து மன்னார் பொலிஸார் மற்றும் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மக்களுடன் கலந்துரையாடினர். எனினும் கடற்படையினர் கைது செய்த குறித்த 25கடல் தொழிலாளர்களையும் உடனடியாக விடுவிக்குமாறும் விடுவிக்காத பட்சத்தில் குறித்த தாழ்வுப்பாட்டு கடற்படை முகாமை விட்டு தாம் கலைந்து செல்லப் போவதில்லை எனவும் தெரிவித்ததை அடுத்து தாழ்வுப்பாட்டு கிராமத்தில் பதற்றநிலை ஏற்பட்டது.

குறித்த கடல் தொழிலாளர்கள் ஏன் கைது செய்யப்பட்டார்கள் என்பது தொடர்பில் கிராம மக்கள் கடற்படையினரிடம் கேட்ட போது அவர்கள் மீன் பிடிப்பதற்கான அனுமதிப்பத்திரத்தை தம் வசம் வைத்திருக்கவில்லை என கடற்படை தெரிவித்ததாக அந்த மக்கள் தெரிவித்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பொலிஸார் தாழ்வுப்பாட்டு கிராம மக்களுடன் கலந்துரையாடிய பின்னர் பொலிஸார் வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக கைது செய்யப்பட்ட 25 கடல் தொழிலாளர்களையும் கடற்படையினரிடம் இருந்து பொலிஸார் பொறுப்பேற்று மன்னார் பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர்.

குறித்த மீனவர்கள் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏனைய பல பிரதேசங்களில் தடை செய்யப்பட்ட மீன் பிடித்தொழில்கள் இடம் பெறுகின்ற போதும் எமது தாழ்வுப்பாட்டு பிரதேசத்தில் மாத்திரம் ஏன் கடற்படையினர் இவ்வாறான கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றார்கள் என கடல் தொழிலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply