மக்கள் ஆணையை மீறக்கூடாது என சம்பந்தன் அறிவுறுத்தல்
கொழும்பு கூட்டு அரசில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை, ஜனவரி 8ஆம் திகதி மக்கள் வழங்கிய ஆணையை எவ்வகையிலும் பாதித்து விடக் கூடாது என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவையும், தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவையும் தனித்தனியாகச் சந்தித்து அறிவுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன்.
தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவை நேற்றுமுன்தினம் இரவு சந்தித்த சம்பந்தன், அவருடன் நீண்ட நேரம் முக்கியமான விடயங்கள் தொடர்பில் பேசினார் எனத் தெரிகிறது.
2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி மக்கள் வழங்கிய ஆணையை மீறி புதிய ஆட்சியொன்று இப்போது உருவாகி விடக் கூடாது என்று அரச தலைவரை எச்சரித்த சம்பந்தன், உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளை வைத்து அரச தலைவர் தேர்தலில் வழங்கப்பட்ட ஆணையை மீறக் கூடாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பின்னர் தலைமை அமைச்சர் ரணிலைச் சந்தித்த சம்பந்தன், இரு தலைவர்களும் இணக்கப்பாட்டுடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். இந்தச் சந்திப்புகள் தொடர்பில் இரா.சம்பந்தன் தெரிவித்ததாவது:-
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி மக்கள் வழங்கிய ஆணையை மீறும் வகையில் எவரும் செயற்படக் கூடாது என்று நான் வலியுறுத்தினேன். முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் தீர வழங்கப்பட்ட அந்த மக்கள் ஆணையை மீறி ஒரு புதிய ஆட்சி உருவாக்கம் இடம்பெற்றுவிடக் கூடாது என்று நான் அரச தலைவரிடம் சுட்டிக்காட்டினேன்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளைக் கொண்டு அரச தலைவர் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையைப் புறந்தள்ளிவிட முடியாது என்பதை நான் சொன்னேன். அரச தலைவர் எனது நிலைப்பாட்டை, கருத்துக்களை விளங்கிக் கொண்டார். இந்தச் சந்திப்பு திருப்திகரமாக இருந்தது. தலைமை அமைச்சரிடமும் இவற்றையே சொன்னேன் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply