தென் சீனக்கடலில் அமெரிக்க போர் கப்பல்: சீனா எச்சரிக்கை

தென் சீனக்கடல் பகுதி வழியாக ஆண்டுதோறும் கோடிக்கணக்கான டாலர் மதிப்பிலான வர்த்தக போக்குவரத்து நடைபெறுகிறது. இந்த பகுதி முழுவதையும் சொந்தம் கொண்டாடும் சீனா, அங்கு செயற்கை தீவுக்கூட்டங்களை உருவாக்கி ராணுவ நிலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கடல் எல்லையில் அமைந்துள்ள வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, தைவான் உள்ளிட்ட நாடுகளும் தென் சீனக்கடல் பகுதிக்கு உரிமை கொண்டாடுகின்றன. இதனால் பல ஆண்டுகளாக சர்ச்சையாக தொடர்ந்து வரும் இந்த விவகாரத்தை, திஹேக்கில் உள்ள சர்வதேச நடுவர் மன்றத்துக்கு பிலிப்பைன்ஸ் எடுத்து சென்றது.

இந்த விவகாரத்தை விசாரித்த நடுவர் மன்றம், தென் சீனக்கடல் பகுதியில் சீனாவுக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை என கடந்த ஜூலை மாதம் தீர்ப்பு அளித்தது. ஆனால் இந்த தீர்ப்பை நிராகரித்த சீனா, தொடர்ந்து அந்த பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனால் இந்த தீர்ப்பை சீனா ஏற்றுக்கொள்ள வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தென் சீனக்கடல் பகுதியில் அமெரிக்காவின் விமானங்கள் மற்றும் கப்பல்கள் செல்வதும், சீனா எதிர்ப்பு தெரிவிப்பதும் தொடர் கதையாகி உள்ளது. செவ்வாய் அன்றும் அமெரிக்காவின் போர் கப்பல் சீனாவின் கடற்பகுதிக்குள் சென்றதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது.

தெற்கு சீனக்கடல் பகுதியில் சர்ச்சைக்குரிய சன்ஷா தீவுகளின் அருகே அமெரிக்க கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது என சீனா சொல்கிறது.

இவ்விவகாரம் அமெரிக்காவிடம் தன்னுடைய எதிர்ப்பையும் பதிவு செய்து உள்ளதாக சீனாவின் வெளியுறவுத்துறை குறிப்பிட்டு உள்ளது. சீனாவின் கப்பல்கள் மற்றும் விமானங்கள் கப்பலை இடைமறித்து எச்சரிக்கை விடுத்தது எனவும் கூறப்படுகிறது.

இதனை அமெரிக்கா உறுதி செய்யவில்லை. “அமெரிக்க போர் கப்பலின் நடவடிக்கையானது சீனா மற்றும் சர்வதேச சட்டங்களை மீறுவதாகும், சீனாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு நலங்களை குறைத்து மதிப்பீடுவதாகும். சீனா தொடர்ச்சியாக தன்னுடைய பகுதிகளை பாதுகாக்கும், சீனாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு நலன்களுக்கு அமெரிக்கா மதிப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்,” என சீனாவின் வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply