ஆப்கானிஸ்தான் எல்லையில் பதற்றம்: தீவிரவாதிகளை வேட்டையாட பாகிஸ்தான் படைகள் குவிப்பு

பாகிஸ்தான் நாட்டை ஒட்டியுள்ள ஆப்கானிஸ்தான் எல்லையோர பகுதிகளில் ஜமாத் உத் அஹ்ரர் என்னும் தீவிரவாத இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தினர் அண்மையில், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் சேவான் நகரில் உள்ள 2 வழிபாட்டுத் தலங்களில் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இதில் 88 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் 76 பேரின் பட்டியலை பாகிஸ்தான் அரசு ஆப்கானிஸ்தானிடம் அளித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி வற்புறுத்தியது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த பாகிஸ்தான் ராணுவம் எல்லையோரம் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது கடந்த 18-ம் தேதி பீரங்கி தாக்குதல் நடத்தியது. இதில் ஜமாத் உத் அஹ்ரர் இயக்கத்தின் முக்கிய தளபதி அடில் பாச்சா உள்பட 10-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, காபுலில் உள்ள பாகிஸ்தான் நாட்டு தூதரக அதிகாரியை வரவழைத்து, எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தியதற்கு ஆப்கானிஸ்தான் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், எல்லைப் பகுதியில் ஏராளமான நவீன ரக ஆயுதங்களையும் ராணுவ வீரர்களையும் இன்று பாகிஸ்தான் அனுப்பி வைத்துள்ளது. எல்லைப்பகுதியில் அதிகரித்துவரும் தீவிரவாதிகளின் வெறியாட்டத்தை ஒடுக்கவும், பாதுக்ஜாப்பை அதிகரிக்கவும் அங்கு கூடுதலாக படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவ தளபதி குவாமர் ஜாவெத் பாஜ்வா குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் ஆகிய இருநாடுகளுமே தீவிரவாதிகளின் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும், தீவிரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக இணைந்து போராடி வரும் ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் இந்தப் போரில் தொடர்ந்து ஈடுபடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply