அமெரிக்க பள்ளி துப்பாக்கிச்சூடு – மத்திய புலனாய்வு படைமீது டிரம்ப் பாய்ச்சல்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், பார்க்லேண்ட் பள்ளிக்கூடத்தில் கடந்த 14-ந் தேதி நடந்த துப்பாக்கிச்சூட்டில் 17 பேர் உயிரிழந்த சம்பவம், அந்த நாட்டையே உலுக்கியது. துப்பாக்கிச்சூடு நடத்திய முன்னாள் மாணவர் நிக்கோலஸ் குரூஸ், இது தொடர்பாக யு டியூப் இணையதளத்தில் பதிவு செய்து, அதுபற்றிய தகவல் மத்திய புலனாய்வு படை (எப்.பி.ஐ.) கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனாலும், அவரை கண்டுபிடித்து இந்த தாக்குதலை தடுத்து நிறுத்த மத்திய புலனாய்வு படை தவறி விட்டது. இதனால் அதன் இயக்குனர் பதவி விலக வேண்டும் என புளோரிடா மாகாண கவர்னர் ரிக் ஸ்காட் வலியுறுத்தினார். இந்த விஷயத்தில், மத்திய புலனாய்வு படையின் தோல்வியை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கண்டித்து உள்ளார்.

இதுபற்றி அவர் டுவிட்டரில் எழுதி இருப்பதாவது:-

புளோரிடா பள்ளிக்கூட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், சம்மந்தப்பட்ட நபரிடம் இருந்து எத்தனையோ சமிக்ஞைகள் வந்தும்கூட, மத்திய புலனாய்வு படையினர் கோட்டை விட்டது மிகுந்த வருத்தம் தருகிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷிய தலையீடு தொடர்பான குற்றச்சாட்டு மீதான விசாரணையில், குற்றச்சாட்டை நிரூபிப்பதற்காக மிகக் கூடுதலான நேரத்தை செலவு செய்கிறீர்கள். அதில் எந்த தலையீடும் கிடையாது. செய்ய வேண்டிய அடிப்படை பணிகளை மீண்டும் செய்து எங்களை பெருமிதம் அடையச் செய்யுங்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply