தலைமன்னார் சிறுமி கொலை விவகாரம் சந்தேக நபர் இந்தியாவுக்கு தப்பியோட்டம் :சார்ள்ஸ் நிர்மலநாதன்

தலைமன்னாரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த சம்பவத்தில் கைதான சந்தேக நபரான அப்துல் ரகுமான் என்ற நபர் வவுனியா வைத்தியசாலையிலிருந்து தப்பித்து இந்தியாவுக்கு சென்றுள்ளார். பொலிஸாரின் பொறுப்பற்ற செயற்பாடுகள் அதிருப்திக்குரியன என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸவிடம் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

கடந்த பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி தலைமன்னாரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார். குச்சவெளிப்பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் என்ற 52 வயதான நபர் முழுமையான சாட்சியங்களோடு கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் ஏப்ரல் 3ஆம் திகதி வவுனியா வைத்தியசாலையிலிருந்து தப்பித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை, படுகொலை ஆகிய குற்றங்களை செய்த இந்த நபரை எப்படி பொலிஸார் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்கள்? இதில்தான் மர்மம் உள்ளது. இந்நபர் அந்த கிராமத்திலுள்ள தென்னந் தோட்டத்தில் வேலை செய்துள்ளார். தொழிலை பெற்றுக்கொள்ள வரும்போது தனது பெயர் விஜேந்திரன் என்று அந்த தென்னம் தோட்ட உரிமையாளரிடம் தெரிவித்து அந்த கிராமத்தில் வாழ்ந்துள்ளார்.

அவர் கைது செய்யப்பட்டதன் பின்னர் தான் தெரியும் அவரின் பெயர் அப்துல் ரகுமான் என்பது. இவ்வாறு பெயர் மாறாட்டம் செய்தது தெரிய வந்துள்ளது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்ய ஒரு நபரை பொலிஸார் எவ்வளவு அலட்சியமாக தப்ப விட்டுள்ளனர். நாளை அவரின் வழக்கு மன்னார் நீதிமன்றத்தில் உள்ளது. இவ்வாறான ஒருவர் வவுனியா சிறையிலிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தப்பிக்க விடப்பட்டுள்ளார். இது தொடர்பில் நீதி அமைச்சரின் பதில் என்ன?

இதேவேளை நேற்று முன்தினம் கூட இரு பெரியவர்களும் ஒரு வயது குறைந்துவரும் இந்தியாவின் ராமேஸ்வரத்துக்கு இலங்கையிலிருந்து சென்றுள்ளனர். இது தொடர்பில் தலைமன்னார் பிரதேச மக்கள் எனக்கு தொலைபேசியில் கூறுகையில், சிறுமியை வன்கொடுமை செய்து கொன்ற கொலையாளிதான் ராமேஸ்வரம் சென்று வேறு பெயரில் தஞ்சமடைந்துள்ளார். என்று கூறினார்கள்.

எனவே இந்த அப்துல் ரகுமான் என்ற குற்றவாளி இந்தியாவின் மண்டபம் முகாமில் தஞ்சமடைந்துள்ளாரா என்ற கேள்வியை தலைமன்னார் மக்கள் இந்த அரசிடம் கேட்க விரும்புகின்றார்கள்.

எனவே இவரை கைது செய்ய நீதி அமைச்சு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதனை கேட்பதுடன் அவரை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply