மனித உயிர்களை டயரில் எரித்தவர்கள் சட்டம் ஒழுங்கு பற்றி பேசுவது வேடிக்கை : ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

மனித உயிர்களை டயர்களுக்கு பலி கொடுத்தவர்களே அதனை மறந்துவிட்டு இப்போது நாட்டின் சட்டம் ஒழுங்கைப் பற்றிப் பேசுகின்றனர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார், மதங்களுக்கிடையிலான நல்லிணக்கம் அருகிவிட்டதாக விமர்சிப்பவர்கள் அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளை நேரில் கண்டாவது கண் திறக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி: நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள சுதந்திர சூழல் அனைத்து மதத்தினரும் தமது மத வழிபாடுகளை சுதந்திரமாக மேற்கொள்ள வழிவகுத்துள்ளது என்பதை மறுத்துவிடக்கூடாது எனவும் தெரிவித்தார்.

பிரதியமைச்சர் நியோமல் பெரேராவின் 600 மில்லியன் ரூபா சொந்த நிதியில் சிலாபம் கெயெல்லேவில விஹாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வட மேல் மாகாணத்திற்கான புத்தபிக்குகள் பயிற்சி மத்திய நிலையத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவிக்கையில்:

நாட்டில் தற்போது சட்டம் நடைமுறையிலில்லை என்று எம்மைக் குற்றம் கூறுபவர்கள் அன்றைய டயரில் எரிக்கப்பட்ட யுகத்தை மறந்து போகின்றனர். நாட்டில் பல இடங்களிலும் டயர் எரிந்த யுகமொன்று இருந்துள்ளது. அந்த யுகம் சிலரால் மறக்கப்பட்டுவிட்டது. சில அரசியல்வாதிகள் இதனை மறந்தாலும் நாட்டு மக்கள் அந்த மோசமான வரலாற்றை மறக்க மாட்டார்கள். நினைவில் வைத்துள்ளார்கள்.

நாட்டில் தற்போது சுதந்திரம் உள்ளது. இந்த சுதந்திர சூழலில் பெளத்த மதம் மட்டுமல்லாது அனைத்து மதத்தினரும் தத்தமது சமயத்தலங்களை அமைந்து சுதந்திரமாக வழிபடக்கூடிய சூழல் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

சிலருக்கு இப்போது கடந்த காலம் மறந்து போய்விட்டது. எனினும் எமது மக்கள் அது குறித்து வேறுபட்டு சிந்திப்பவர்கள்.

நாட்டின் சட்டத்தைப் பற்றிப் பேசுபவர்கள் ஒரு காலத்தில் சட்டம் சரிவர செயற்படுத்தப்பட்டதாகக் கூறுகின்றனர். அக்கால சட்டத்தைப் பற்றிப் பேசுபவர்களுக்கு டயர்களில் மனித உயிர்கள் எரிக்கப்பட்ட சம்பவங்கள் மறந்து போயுள்ளது என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply