இந்த நூற்றாண்டு இளைஞர்களுக்கு சொந்தமானது மாநாடு வெற்றிபெற ஜனாதிபதி வாழ்த்து

இலங்கை சமாதான யுகத்திற்குள் பிரவேசித்து இளைஞர்களின் குறிப்பிட த்தக்க பங்களிப்புகளுடன் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க வழியில் முன்னேறிவரும் ஒரு சூழ்நிலையில் இந்த மாநாடு நடைபெறுவது மிகவும் பொருத்தமானதாகும் என்று இலங்கையில் நடைபெறும் இளைஞர் மாநாட்டுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், இலங்கை இன்று அடைந்திருக்கும் இந்த சமாதான சூழ்நிலையானது மூன்று தசாப்தகால பயங்கரவாத மோதலுக்குப் பின்னர் அடையப் பெற்றதாகும்.

கடந்த மூன்று தசாப்தங்களாக நாட்டில் நிலவிய பயங்கரவாத சூழ்நிலை காரணமாக எமது இளைஞர்கள் பல்வேறு கஷ்டங்களுக்கும் துன்பங்களுக்கும் முகம் கொடுத்த அதே நேரம் அது அவர்களது முன்னேற்றத்திற்கும் பெரும் தடையாக இருந்து வந்தது.

இந்த நூற்றாண்டு இளைஞர்களுக்கு சொந்தமானது. இது அறிவின் நூற்றாண்டாகும் என இலங்கையின் தேசிய கொள்கை குறிப்பிடுகின்றது. இது நாட்டின் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தையும் தேசிய அபிவிருத்தி பணிகளில் இளைஞர்களின் குரலுக்கு செவிமடுப்பதற்கான அழுத்தத்தையும் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

இந்தப் புதிய தொழில்நுட்ப முன்னேற்ற யுகத்தில் குறிப்பாக தகவல் தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் புத்தாக்கம் மற்றும் சமூக அபிவிருத்திக்கான புதிய சந்தர்ப்பங்களை உருவாக்குதல் ஊடாக நாட்டின் இளைஞர்கள் முன்னேறிச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

பல்வேறு நாடுகள் சமூகங்கள் மற்றும் கலாசாரங்களை பிரதிபலிக்கும் பெரும் எண்ணிக்கையான இளைஞர்கள் இந்த நிகழ்வில் பங்குபற்றுகின்றனர் என்பதை நான் மிகுந்த திருப்தியோடு குறிப்பிட விரும்புகிறேன். இலங்கைப் பிரதிநிதிகள் குழுவில் எமது சுதேச சமூகத்தைச் சேர்ந்தவர்களும் வித்தியாசமான இயலுமைக் கொண்டவர்களும் உள்ளடக்கப்பட்டிருப்பதை இட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். உங்களது தீர்மானங்கள் எதிர்வரும் தசாப்தங்களில் இளைஞர் தொடர்பான சர்வதேச மூலோபாயங்களுக்கு ஒரு முக்கிய பங்களிப்பாக அமையும்.

எல்லா வெளிநாட்டு பங்குபற்றுனர்க ளையும் நான் இலங்கைக்கு வரவேற்பதுடன் நீங்கள் எமது மக்களின் நட்புறவையும் உபசரிப்பையும் அனுபவிப்பீர்கள் என நம்புகிறேன். இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடாத்துவதற்கு பங்களிப்பு செய்த பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களின் பங்களிப்புகளை நான் பாராட்டுகிறேன்.

இன்று உலகில் இளைஞர்களது பிரச்சினைகளை தீர்ப்பதிலும் அவர்களது நலனோம்புகையிலும் 2014ம் ஆண்டு சர்வதேச இளைஞர் மாநாடு முழுமையாக வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று தமது வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply