By thulasi on Aug. 28, 2008.
பயங்கரவாதிகளிடமிருந்து வடக்கை மீட்டெடுக்கும் மனிதாபிமான நடவடிக்கைகள் பூர்த்தியடைந்து வரும் அதே வேளையில் அப்பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
வடக்கில் பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்ட பிரதேசங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குத் தேவையான இயந்திர உபகரணங்களை படையினரிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இராணுவத் தலைமையகத்துக்கு அருகிலுள்ள மைதானத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அவர் மேலும் கூறுகையில்,
கிழக்கு மாகாணத்தை புலிகளிடமிருந்து மீட்டெடுத்ததோடு அப்பிரதேசங்களை அபிவிருத்தி செய்யவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. தொடர்ந்தும் அப்பிரதேசங்களில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோன்று வடக்கிலும் அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமையவே இந்த உபகரணங்களை அரசாங்கம் வழங்குகிறது.
உண்மையில் இந்த நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை பூண்டோடு அழிப்பதையே அரசாங்கம் நோக்காகக் கொண்டுள்ளது. கிழக்கைப்போன்று வடக்கையும் சகல துறைகளிலும் அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மன்னார், வவுனியா, முல்லைதீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலுள்ள குளங்கள் மற்றும் வீதிகள் என்பவற்றை அபிவிருத்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்குத் தேவையான இயந்திர உபகரணங்கள் தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் மூலம் முன்னெடுக்கப்படுகின்ற ஜாதிக சவிய வேலைத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
மோட்டார் கேட்டர்கள், பெக்கோ இயந்திரங்கள் மற்றும் டிப்பர் வாகனங்கள் உட்பட பல கோடி ரூபா பெறுமதியான இந்த உபகரணங்களை பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ இராணுவத்தினரிடம் நேற்றுக் கையளித்தார்.
இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புதல், உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் குமாரசிறி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
ஆக்கம்: இலங்கைச் செய்தி
வாசகர் கருத்தெதுவும் பதியவில்லை