புலிகளின் தற்கொலைப் பிரிவைச் சேர்ந்த பெண் ஒருவரை கைது !

By thulasi on Aug. 29, 2008.

முக்கிய புள்ளி ஒருவரைக் கொலை செய்யும் திட்டத்துடன் மொறட்டுவ தொடரூந்து நிலையத்தில் காணப்பட்ட விடுதலைப்புலிகளின் தற்கொலைத் தாக்குதல் பிரிவைச் சேர்ந்த பெண்ணொருவரை மொறட்டுவ காவற்துறையின் விசேட நடவடிக்கைப் பிரிவின் அதிகாரிகள் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இருந்து சென்றிருந்த இந்த பெண் புலி உறுப்பினர் 15வது சார்க் மாநாடு நடைபெற்ற காலப்பகுதியில் கொழும்பு நகரில் சுற்றித்திரிந்து தகவல்களை திரட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

மட்டக்களப்பு சிறைசாலையில் கைக்குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது

By thulasi on Aug. 29, 2008.

மட்டக்களப்பு சிறைசாலையில் இன்று(29)  காலை 6.10 மணியளவில் கிரனைட் கைக்குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியச்சகருமான ரஞ்ஜித் குணசேகர லங்காபுவத் செய்திச் சேவைக்கு   தெரிவித்தார் .

இச் சம்பவத்தில்  7 பேர் வரை   காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சம்பவம் குறித்த  விசாரணைகள் நடைபெற்ற பின்னர்   மேலதிக தகவல்களை வெளியிடுவதாகவும் சிறைசாலையில் தற்போது பூரன சோதனை நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் ரஞ்ஜித் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

 

இனப்பிரச்சினைக்கு யுத்தம் தீர்வாகாது என்பதில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உறுதியாக இருக்கின்றார் - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச

By Kavith on Aug. 28, 2008.

இனப்பிரச்சினைக்கு யுத்தம் தீர்வாகாது என்பதில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உறுதியாக இருக்கின்றார். உரிய களநிலை அடைந்ததும் அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் என சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவிலயாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், வன்னியில் முன்னெடுக்கப்பட்டுள்ள யுத்த முன்னெடுப்புகள் எப்போது முடிவுக்குள் வரும் என உதிறுபடத் தெரிவிக்க முடியாது. திட்டமிட்டபடி படை நவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. படை நடவடிக்கை தொடர்பான விடங்களை வெளிப்படையாகக் கூறமுடியாது. எனினும் மக்களுக்கு பாதுகாப்பு ஏற்படாத வகையில் படை நடவடிக்கை முன்னெடுக்கபடுகின்றது.

வன்னியில் இடம்பெயரும் மக்களை பாதுகாப்பான இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வரவழைப்பதே படையினரின் திட்டம். இதுகுறித்த துண்டுப் பிரசுரங்களை வன்னியில் யுத்த வானூர்திகள் மூலம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

கிழக்கை மீட்டது போல் வன்னியையும் மீட்டெடுப்போம். இனப்பிரச்சினைக்கு யுத்தம் தீர்வாகாது என்பதில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உறுதியாக இருக்கின்றார். உரிய களநிலை அடைந்ததும் அரசியல் தீர்வு முன்வைக்கப்படும்.

படையினரின் மனவலிமையை குறைப்பதற்கே திருகோணமலை கடற்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின் வானூர்திகள் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன. ஆனாலும் படையினரின் மனவலிமை குன்றவில்லை.

அதேநேரம், வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்குவதற்கான உணவு மற்றும் மருந்துப் பொருள்கள் சீராக அனுப்பப்பட்டு வருவதாகவும், போதியளவு பொருள் இருப்பு அங்கு காணப்படுவதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார். இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் கோதபாய ராஜபக்ஷவுடன், வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் திவாரட்ண ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

சம்பந்தனின் குற்றச்சாட்டை மறுத்துரைத்த தேசிய பாதுகாப்புப் பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல

By Kavith on Aug. 28, 2008.
வன்னியிலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இடம்பெயர மக்கள் அச்சம்: சம்பந்தன் 

வன்னியில் தொடரும் மோதல்களால் ஏற்கனவே 2 இலட்சத்துக்கும் மேலதிகமானவர்கள் இடம்பெயர்ந்திருப்பதுடன், மேலும் 3 ஆயிரம் குடும்பங்கள் இடம்பெயவிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. எனினும், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வர அஞ்சுவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தது.

முழுமையாக வாசிக்க……… »

கனடாவில் நிகழ்ந்த மனசாட்சியின் குரல் கண்காட்சி நிகழ்ச்சில் த.வி.கூ தலைவர் திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்கள் ஆற்றிய உரை

By thulasi on Aug. 28, 2008.

தலைமுறை தலைமுறையாக இலங்கையில் பல்லின மக்களாகிய சிங்கள, தமிழ், இஸ்லாமிய, பறங்கிய, மலாய மற்றும் பல்லினங்களும் அமைதியாகவும், சமாதானமாகவும், வாழ்ந்து வந்துள்ளனர். 1970ம், 80ம் ஆண்டுகளில் மனித உரிமை மீறல்கள், நீதியற்ற நடவடிக்கைகள், பாரபட்ச செயற்பாடுகள், சுரண்டல், சகிப்புத் தன்மைக்கு அப்பால் ஏற்பட்ட சம்பவங்களால் அடிக்கடி அசம்பாவிதங்கள் ஏற்பட்டன. அவற்றால் பாதிப்புற்றோர், அநேகமாக பாதிப்புற்றோர் தமிழ், இஸ்லாமிய மக்களே. தமிழ், இஸ்லாமிய மக்களை பாதுகாப்பதற்கென்றே பல தமிழ் குழுக்கள் உருவாகின. ஆனால் அவர்களின் ஆயுத பலம் விடுதலைப் புலிகளின் ஆயுத பலத்துக்கு ஈடுகொடுக்க முடியாததால் அத்தனை இயக்கங்களும் அழிக்கப்பட்டு, மௌனமாக்கப்பட்டு விடுதலைப் புலிகள் மாத்திரம் சர்வாதிகார கோட்பாட்டுடன் தனி இயக்கமாக திகழ்ந்தது. தமிழ் மக்களின்; உரிமைகளை பாதுகாப்பதாக கூறி வட மாகாணத்தில் வாழ்ந்த இஸ்லாமிய மக்களை இஸ்லாமியர் என்பதற்காகவே வேறு எதுவித காரணமும் இன்றி அவர்களின் அனைத்து சொத்துக்களையும் கை விட்டு விட்டு பல தலைமுறைகளாக தமிழ் மக்களுடன் அன்னியோன்யமாக பழகிய பூமியையும் விட்டு வெளியேற்றினர். அவர்கள் 17 ஆண்டுகளின் பின் இன்றும் தென்னிலங்கையில் புத்தளம், அனுராதபுரம், ஆகிய மாவட்டங்களில் உரிய வசதிகளின்றி அகதி முகாம்களில் வாடுகின்றனர். நம் நாட்டில் அகதி முகாம்கள் இருக்கும் வரை அதில் சிங்களவர்களோ, தமிழர்களோ, இஸ்லாமியரோ வேறு எந்த இனத்தவர் வாழ்ந்தாலும் ஜனநாயக உரிமைகள் பற்றி பேசும் தார்மீக உரிமை எமக்கு இல்லை. எம் மக்களில் ஒரு பகுதியினர் ஜனநாயக அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்டு, சொல்லொணா துன்பங்களை அனுபவி;க்கும் போது எமது நாடு சகல உரிமைகளையும் மக்கள் அனுபவிக்கும் ஓர் நாடாக நாம் பெருமை கொள்ள முடியாது. ஜனநாயக உரிமை, அடிப்படை உரிமை, மனித உரிமையற்ற தன்மை அடிமை நிலைமைக்கு சமமானதாகும். எமது இளைஞர்கள், சிங்களவர்களானாலும் சரி, தமிழர், முஸ்லீம்களானாலும் சரி இரத்தம் சிந்தி யுத்த முனையில் மரணிக்க வேண்டுமா? சர்வதேச சமூகமும், சிறுபான்மை மக்களும் ஏற்கக்கூடிய ஓர் நியாயமான தீர்வுத் திட்டத்தை அரசு முன் வைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. முழுமையாக வாசிக்க……… »

உணவு விஷமானதில் 212 படையினர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

By thulasi on Aug. 28, 2008.

தெஹியத்கண்டிய இராணுவ பயிற்சி முகாமைச் சேர்ந்த படையினர் 212 பேர் உணவு விஷமானதால் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சாப்பிட்ட உணவில் வைக்கப்பட்டிருந்த மீன் விஷமானதால் இவர்கள் நோய் வாய்க்குட்பட்டுள்ளனர் என ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

மயக்கம், வாய்ந்தி, உடம்பு எரிச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட படையினர் உடனடியாக தெஹியத்கண்டிய மற்றும் அதற்கு அருகிலுள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பில் தெஹியத்கண்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருணா தொடர்பில் சந்திரிக்காவின் செய்தியுடன் புலிகளின் தலைவரைச் சந்தித்ததாக கூறுகிறார் மனோகணேசன்

By thulasi on Aug. 28, 2008.

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்த கருணா தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவின் செய்தி ஒன்றுடன் 2005 ஆம் ஆண்டில் இறுதியாக தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தான் சந்தித்ததாக மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் தெரிவித்துள்ளார்.  விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகி கருணா அரசியல் பாதுகாப்புக் கோரி கொழும்புக்கு வந்தால் அவருக்கு தான் பாதுகாப்பு வழங்க எடுக்கும் நடவடிக்கையினால் கோபமடைய வேண்டாம் எனக் கூறி முன்னாள் ஜனாதிபதி எழுதியிருந்த செய்தி அடங்கிய கடிதத்தை தான் பிரபாகரனிடம் வழங்கியிருந்ததாக மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். இந்தச் செய்தியை பிரபாகரனிடம் வழங்கிய பின்னர் பிரபாகரன் கூறிய விடயங்களை ஜனாதிபதி மாளிகையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவிடம் தெரிவித்ததாகவும் இதன் போது அமைச்சர் வசந்த அழகியவண்ண இருந்ததாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். தான் ஒருபோதும் ரகசியமாக விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளைக் கொண்டிருக்கவில்லை எனவும் கிளிநொச்சி சென்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும் அது குறித்து அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறிவித்து விட்டே சென்றதாகவும் அவர் கூறியுள்ளார். எனினும் விடுதலைப்புலிகளுடன் ஒருபோதும் சட்டவிரோத தொடர்புகளை தான் கொண்டிருக்கவில்லை என்பதை பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் கூறியதாகவும் மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் மூவாயிரம் குடும்பங்கள் இடம்பெயரும் அபாயம் வன்னியில் ஏற்பட்டுள்ளது

By thulasi on Aug. 28, 2008.

வன்னியில் தொடரும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக மேலும் 3000 குடும்பங்கள் இடம்பெயரும் அபாயம் தோன்றியுள்ளது. மோதல்கள் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் மத்திய பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ள மக்கள் பொது இடங்களிலும் திறந்த வெளிகளிலும் தங்கியுள்ளனர் என்று ஐ.நா. முகவர் நிறுவனங்களின் நிலையியற் குழு தெரிவித்துள்ளது.

இடம்பெயர்ந்த மக்களுக்கு ஐயாயிரம் தற்காலிக கூடாரங்கள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட செயலகம் கோரியுள்ளது என்றும் இந்த குழு சுட்டிக்காட்டியுள்ளது. முழுமையாக வாசிக்க……… »

வடக்கை மீட்டெடுக்கும் மனிதாபிமான நடவடிக்கை பூர்த்தி நிலையில் உள்ளதாம் !

By thulasi on Aug. 28, 2008.

பயங்கரவாதிகளிடமிருந்து வடக்கை மீட்டெடுக்கும் மனிதாபிமான நடவடிக்கைகள் பூர்த்தியடைந்து வரும் அதே வேளையில் அப்பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

 வடக்கில் பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்ட பிரதேசங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குத் தேவையான இயந்திர உபகரணங்களை படையினரிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இராணுவத் தலைமையகத்துக்கு அருகிலுள்ள மைதானத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அவர் மேலும் கூறுகையில்,

கிழக்கு மாகாணத்தை புலிகளிடமிருந்து மீட்டெடுத்ததோடு அப்பிரதேசங்களை அபிவிருத்தி செய்யவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. தொடர்ந்தும் அப்பிரதேசங்களில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோன்று வடக்கிலும் அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமையவே இந்த உபகரணங்களை அரசாங்கம் வழங்குகிறது.

உண்மையில் இந்த நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை பூண்டோடு அழிப்பதையே அரசாங்கம் நோக்காகக் கொண்டுள்ளது. கிழக்கைப்போன்று வடக்கையும் சகல துறைகளிலும் அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மன்னார், வவுனியா, முல்லைதீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலுள்ள குளங்கள் மற்றும் வீதிகள் என்பவற்றை அபிவிருத்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்குத் தேவையான இயந்திர உபகரணங்கள் தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் மூலம் முன்னெடுக்கப்படுகின்ற ஜாதிக சவிய வேலைத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

மோட்டார் கேட்டர்கள், பெக்கோ இயந்திரங்கள் மற்றும் டிப்பர் வாகனங்கள் உட்பட பல கோடி ரூபா பெறுமதியான இந்த உபகரணங்களை பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ இராணுவத்தினரிடம் நேற்றுக் கையளித்தார்.

இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புதல், உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் குமாரசிறி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

புலிகளின் முக்கிய உறுப்பினர் வினிதன் இராணுவத்தின் தாக்குதலில் பலி

By thulasi on Aug. 28, 2008.

திருகோணமலை வேளான் குளம் பகுதியில் நேற்று இரவு  9.15 மணியளவில் இலங்கை விமானப்படையினர் மேற்கொண்ட தாக்குதலின் போது முக்கிய விடுதலைப்புலி உறுப்பினரான ‘வினிதன்’ பலியாகியுள்ளார்.

விமானப்படையினரால் நேற்று  இரவு 9.15 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலில் முக்கிய விடுதலைப்புலி உறுப்பினர்கள் இருவர் பலியாகியுள்ளதுடன் பின்னர் உயிரிழந்தவர்களில் ஒருவர் வினிதன் என இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம்  தெரிவித்துள்ளது.

விமானப்படையினர்   தாக்குதலின் போது பலியான இரு  சடலங்களுடன் ரி 56 ரக துப்பாக்கி ஒன்றினையும் கண்டுபிடித்துள்ளனர் என இராணுவத்தினர் தொரிவித்துள்ளனர்.

 

கடத்தப்பட்ட விமானத்தின் பயணிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்

By thulasi on Aug. 28, 2008.

சூடான் நாட்டில் நியாலா நகரில் இருந்து கார்ட்டூம் நகருக்கு புறப்பட்ட விமானத்தை தீவிரவாதிகள் கடத்தினார்கள். அந்த விமானம் லிபியா நாட்டில் சஹாரா பாலைவனத்தில் உள்ள கப்ரா என்ற இடத்தில் தரை இறங்கியது. எரிபொருள் இல்லாததால் அது அங்கே தரை இறங்கியது. அங்கு இருந்து பாரீஸ் நகருக்கு செல்வதற்கு தேவையான எரிபொருள் வழங்கும்படி லிபியாநாட்டை அவர்கள் கோரினார்கள். அங்கு இருந்த போது அவர்கள் 95 பயணிகளை விடுவித்தனர். விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் விடுவிக்கப்பட்டனர் என்பதை எங்களால் உறுதியாக கூற முடியும் என்று லிபியா அதிகாரிகள் தெரிவித்தனர்.

 சூடான்விமான நிறுவனத்தின் மேலாளர் கூறுகையில், விமானப்பயணிகளை விடுவிப்பதற்காக ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. விமானத்தில் உள்ள கடத்தல்காரர்கள் உணவும், எரிபொருளும் தரவேண்டும் என்று கோரி உள்ளனர் என்று தெரிவித்தார்.

கடத்தல்காரர்கள் சூடான் விடுதலை இயக்கத்தை சேர்ந்தவர்கள். அந்த இயக்கத்தின் தலைவனான அப்தெல் வாஹித் முகமது அல் நூர் பாரீசில் தங்கி இருப்பதாகவும் அவரை சந்திப்பதற்காக தான் விமானத்தை கடத்தியதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஆனால் வாஹித் முகமது அல் நூர் கடத்தல்காரர்கள் எங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் இல்லை எனறு கூறிவிட்டார்.

 

ஒரிசா வன்முறைக்கு போப் ஆண்டவர் கண்டனம் தெரிவித்துள்ளார்

By thulasi on Aug. 28, 2008.

ஒரிசா மாநிலத்தில் கிருஷ்ண ஜெயந்தி அன்று ஆசிரமத்தில் பூஜை செய்து கொண்டிருந்த விசுவ இந்து பரிசத் தலைவர் சுவாமி லட்சுமணானந்த சரஸ்வதி (வயது 85) மற்றும் சீடர்கள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்து அமைப்புகள் நடத்திய ‘பந்த்’தின்போது கலவரமë வெடித்தது. அதில் கிறிஸ்துவ தேவாலயங்கள் எரிக்கப்பட்டன.

கிறிஸ்தவர்கள் வீடுகளும், கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன. இதில் 5 பேர் பலியாகினர். கலவர கும்பலை கலைக்க போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் உயிரிழந்தனர். இன்னும் பல்வேறு பகுதிகளில் கலவரம் நீடித்து வருகிறது. கிறிஸ்தவர்கள் மீது நடைபெறும் வன்முறை சம்பவங்களுக்கு போப் ஆண்டவர் கண்டனம் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் சுவாமி லட்சுமணானந்தா மறைவுக்கும் அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வாடிகனில் நேற்று போப் ஆண்டவர் கூறுகையில், “மனித உயிர்கள் மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலையும் நான் கண்டிக்கிறேன். அனைவரிடத்திலும் அன்பும் மரியாதையும் செலுத்த வேண்டும். வன்முறை சம்பவங்களில் பலியான அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

 

 

பிலிப்பைன்ஸ் நாட்டில் நடந்த சண்டையில் 180 பேர் பலி

By thulasi on Aug. 28, 2008.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் முஸ்லிம் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே கடந்த 10 நாட்களாக நடந்த சண்டையில் 187 பேர் பலியானார்கள். அவர்களில் 60 பேர் அப்பாவிகள் என்று கூறப்படுகிறது.

தீவிரவாதிகள் தரப்பில் 110 பேரும் 17 ராணுவ வீரர்களும் பலியானார்கள். மின்டானோ மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இதை எதிர்த்து கிறிஸ்தவர்கள் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அந்த ஒப்பந்தம் செயல்படாமல் நிறுத்தி வைத்தது. இதை தொடர்ந்து தான் இருதரப்பினருக்கும் இடையே சண்டை தொடங்கியது.

பல ஆண்டுகளாக நடந்து வரும் சண்டை காரணமாக 3 லட்சத்து 60 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடத்தை தேடி வெளியேறினார்கள்.

 

வவுனியாவில் கப்பம் பெற முயன்ற ஆயுதக்குழு இராணுவத்திடம் சிக்கினர்

By thulasi on Aug. 27, 2008.

வவுனியா குடியிருப்பு பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த பெண்ணிடம் 10 லட்சம் ரூபா பணத்தைக் ஆயுத முனையில் கப்பமாகப் பெற முயன்ற, விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படும் 3 பேரை இராணுவத்தினர் சுற்றி வளைத்துப்பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.40 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும் இராணுவம் கூறியுள்ளது. சம்பவ நேரம் அந்த வீட்டிலிருந்த வேறு ஒரு பெண் அருகில் உள்ள இராணுவ முகாமுக்குச் சென்று தகவல் தெரிவித்ததையடுத்து.

உடனடியாக அந்த வீட்டைச் சுற்றி வளைத்த இராணுவத்தினர் கப்பம் கோரிய 3 பேரையும் அவர்களது மோட்டார் சைக்கிளுடன் கைது செய்துள்ளதாகவும் இராணுவம் தனது இணையத்தளத்தில் தெரிவித்துள்ளது, கைது செய்யப்பட்ட மூவரும் வவுனியா பொலிசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளதையடுத்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

© 2008 - TELOnews.com