அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட ரணில்
இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாத ஆட்சியாளர்களுக்கு எதிராக பொதுமக்கள் கிளர்ச்சி செய்து வருகின்றனர். இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே சமீபத்தில் பதவி விலகினார். இதனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இடைக்கால அதிபராக பதவியேற்று உள்ளார்.
புதிய அதிபருக்கான தேர்தல் 20-ந்தேதி நடக்கிறது. கோத்தபய ராஜபக்சே பதவி விலகினாலும், எதிர்ப்பை கைவிடாத போராட்டக்காரர்கள் இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராகவும் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். நாட்டின் ஒட்டுமொத்த அரசு அமைப்பையும் மாற்றும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்து உள்ளனர்.
இந்தநிலையில், பொருளாதார சிக்கலில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு பல்வேறு சலுகைகளை ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார். இலங்கையில் 2 ஏக்கருக்கு குறைவான வயல்களில் பயிரிட்ட விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் பெட்ரோல் விலையும் குறைக்கப்படும். எரிபொருள் விநியோகத்தில் ஜூலை மாதம் கடினமான காலமாக இருக்கும். எவ்வாறாயினும், டீசல் இருப்புக்கள் பாதுகாக்கப்பட்டு அனைவருக்கும் விநியோகிக்கப்படும், ஜூலை 21 முதல் பெட்ரோலும் விநியோகிக்கப்படும்.
நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தனி மனிதர் மீதான கருத்து வேறுபாடுகளால் நாடு பாதிக்கப்படுவதற்கு இடமளிக்க வேண்டாம். மேலும் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மேலும் வெளிநாடுகளுடனான உதவிக்கான கலந்துரையாடல்களும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என இலங்கை அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply