உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமனுக்கு இடம்
அமெரிக்காவின் பிரபல போர்ப்ஸ் பத்திரிகை ஆண்டுதோறும் உலகின் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 100 பேர் கொண்ட இந்தப் பட்டியலில் இடம்பெறுவது மிகப்பெரும் கவுரவமாக பார்க்கப்படுகிறது. செல்வம், ஊடகம், தாக்கம் மற்றும் செல்வாக்கு ஆகிய 4 துறைகளில் இருந்து இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில், போர்ப்ஸ் பத்திரிகை இந்த ஆண்டுக்கான சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.
போர்ப்ஸ் பத்திரிகையின் இந்த பெருமை மிகுந்த பட்டியலில் முக்கியமாக 39 தலைமை செயல் அதிகாரிகள், 10 நாடுகளின் தலைவர்கள், 11 கோடீசுவரர்கள் இடம் பிடித்துள்ளனர். இதில் உலக அளவில் மிகவும் சக்திவாய்ந்த பெண்ணாக ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
உக்ரைன் போர் மற்றும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் அவரது செல்வாக்கு மிகுந்த தலைமையை அடிப்படையாக கொண்டு பட்டியலில் முதலிடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் பட்டியலில் ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் கிறிஸ்டின் லக்ராட் 2-ம் இடத்தையும், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்தப் பட்டியலில் இந்தியாவில் இருந்து 6 பேர் இடம்பிடித்துள்ளனர். இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 36-வது இடம் பிடித்துள்ளார்.
கடந்த 3 ஆண்டாக இந்தப் பட்டியலில் இடம்பிடித்து வரும் அவர், 4-வது முறையாக இந்த ஆண்டும் தனது இடத்தை உறுதி செய்திருக்கிறார். எச்.சி.எல். டெக் தலைவர் ரோஷிணி நாடார் மல்கோத்ரா 53-வது இடமும், செபி தலைவர் மாதபி புரி பக் 54-வது இடமும், இந்திய ஸ்டீல் ஆணைய தலைவர் சோமா மண்டல் 67-வது இடமும் பிடித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply