சட்டத்தரணிகள் சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று முக்கிய யோசனைகள் இவைதான்!
இன்று (15) இடம்பெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கூட்டத்தில் முக்கிய மூன்று யோசனைகள் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டதை அடுத்து புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்தே மூன்று யோசனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்க கூட்டம் இன்று காலை இடம்பெற்றது.
இன்று முன்வைக்கப்பட்ட மூன்று யோசனைகளுக்கு ஆதரவு மற்றும் எதிர் கருத்துக்கள் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு இறுதியில் யோசனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
01.பிரதம நீதியரசர் குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை சுயாதீன குழுவால் ஆராயப்படும் என கடந்த 11ம் திகதி ஜனாதிபதி அறிவித்துள்ளார். அதன்படி குற்றப்பிரேரணைனை மீள்பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதிக்கு வலியுறுத்தல்.
02.மீள்பரிசீலனை செய்யப்பட்ட பின் தொடர் விசாரணைகள் இடம்பெறுமாயின் அந்த விசாரணைகளை நியாயமான முறையில் நடத்த சட்ட ஒழுங்குகளை மேற்கொள்ள ஜனாதிபதி மற்றும் சபாநாயகரை வலியுறுத்தல்.
03.அப்படியல்லாமல் பிரதம நீதியரசர் பதவி விலக்கப்பட்டு புதிய பிரதம நீதியரசர் தெரிவு செய்யப்பட்டால் அவரை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்காது.
மேற்கூறிய மூன்று யோசனைகள் இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினரும் ததேகூ பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply