நாடாளுமன்றத்தில் முஸ்லீம்கள் சாப்பிடக்கூடாது : ஹசன் அலி
இலங்கை நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் பன்றிக்கறி பரிமாறப் படவிருப்பதைத் தொடர்ந்து இனிமேல் முஸ்லிம் உறுப்பினர்கள் அங்கே சாப்பிடாமல் தவிர்ப்பது நலம் என்கிறார் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரீ. ஹசன் அலி.
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிற்றுண்டிச்சாலையில் வழங்கப்படும் உணவுகளில் பன்றி கறியையும் வழங்கலாம் என்று கடந்த வியாழக்கிழமை தீர்மானிக்கப்பட்டது. இதனையடுத்து இனிமேல் தாம் நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் சாப்பிடாமல் தவிர்க்கப்போவதாகவும் மற்ற முஸ்லீம் உறுப்பினர்களும் அங்கே சாப்பிடாமல் தவிர்ப்பது நலம் என்றும் ஹசன் அலி தெரிவித்தார்.
ஹலால் உணவுகளை மட்டுமே முஸ்லீம்கள் சாப்பிடவேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துவதாகவும் இஸ்லாத்தில் ஹராம் என்று அடையாளப்படுத்தப்படும் பன்றிக்கறியினால் சமைக்கப்பட்ட உணவு வகைகள் ஏனைய உணவுகளுடன் கலந்துவிடக்கூடும் என்ற அச்சம் காணப்படுவதாகவும் இதனால் அங்கே சாப்பிடாமல் தவிர்ப்பதே நல்லது என்றும் கூறினார்.
அதேசமயம் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு சிற்றுண்டிச்சாலையில் முஸ்லீம் சமையற்காரர்கள் பணிக்கமர்த்தப்பட்டால் நல்லது என்றும் அப்படிச் செய்தால் மீண்டும் தாங்கள் அங்கே தயக்கம் இல்லாமல் சாப்பிடமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply