இராக்கில் விமானப்படை தாக்குதலில் 200 ஐஎஸ் தீவிரவாதிகள் பலி
இராக்கில் மொசூல் நகருக்கு அருகே விமானப் படைகள் தாக்குதல் நடத்தியதில் 100-க்கும் மேற்பட்ட ஐஎஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.சிரியாவில் மையமிட்டுள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டு வருகின் றனர். அவர்களை ஒடுக்க அரசு படையினர் போராடி வருகின்றனர். இந்நிலையில், சிரியாவின் எல்லைப் பகுதியில் இருந்து இராக் பகுதிக்குள் ஐஎஸ் தீவிரவாதிகள் ஊடுருவி வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து இராக் விமானப் படையினர் மொசூல் நகருக்கு வெளியில் 3 இடங்களில் அதிரடி தாக்குதல் நடத்தினர்.
இதுகுறித்து இராக் அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘‘மொசூல் நகருக்கு வெளியில் பாஜ் என்ற பகுதியில் (வடமேற்கு பகுதியில் சிரிய எல்லையோரம் உள்ளது) ஐஎஸ் தீவிரவாதிகளின் 3 முகாம்கள் மீது விமானப் படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் 150-ல் இருந்து 200 ஐஎஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். சிரியா எல்லையில் இருந்து இராக் எல்லைக்குள் அவர்கள் சுதந்திரமாக வந்து செல்வதை அடுத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது’’ என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், விமானப் படை தாக்குதல் எப்போது நடந்தது என்ற தகவல் அந்த அறிக்கையில் இல்லை. மேலும், ஐஎஸ் தீவிரவாதிகள் 200 பேர் வரை கொல்லப்பட்ட செய்தியை உறுதி செய்வதற்கு இராக் அதிகாரிகளையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
முன்னதாக இராக்கில் மொசூல் நகரம் ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்தது. அவர்களிடம் இருந்து நகரை மீட்க இராக் ராணுவமும் அமெரிக்கா தலைமையிலான சர்வதேச படையினரும் தொடர்ந்து தாக்குதல் நடத்தினர். அதன் பலனாக கடந்த ஜனவரி மாதம் மொசூல் நகரின் கிழக்குப் பகுதி ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து முற்றிலும் விடுவிக்கப்பட்டது. மொசூல் நகரின் மேற்குப் பகுதியில் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து மீட்க தொடர்ந்து சண்டை நடந்து வருவதாக இராக் அதிகாரிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply