ஜகத் ஜயசூரிய இழைத்த குற்றத்திற்கு நான் பொறுப்பல்ல : சரத் பொன்சேகா
குற்றமிழைத்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுப்பதை விடுத்து பாதுகாக்க முற்படக் கூடாது என்று ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.
போரை முடிவுக்கு கொண்டுவந்த ஸ்ரீலங்கா இராணுவத்தினர் உட்பட அரச படையினரை தண்டிக்க, தான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்றைய தினம் சூளுரைத்திருந்த நிலையிலேயே பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இந்தக் கருத்தை தெரிவித்திருக்கின்றார்.
முன்னாள் இராணுவத் தளபதியும் பிரேசிலுக்கான முன்னாள் தூதுவருமான ஜெனரல் ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பிரேசிலில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பில் கருத்துத் தெரிவித்திருந்த யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா, ஜகத் ஜயசூரியவினால் இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சாட்சியமளிக்கத் தயார் என அறிவித்திருந்தார்.
இதற்கு மஹிந்த அணியினரும் சிங்கள பேரினவாத சக்திகளும் கடும் ஆத்திரம் வெளியிட்டுவருவதுடன் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகாவின் அமைச்சர் பதவியை பறித்து அவரை கைதுசெய்ய வேண்டும் என்று அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அந்தக் கட்சியின் தலைவராக ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன போரை முடிவுக்கு கொண்டுவந்த இராணுவம் உட்பட அரச படையினர் மீது யுத்தக் குற்றங்களை சுமத்தவோ அதன் அடிப்படையில் தண்டிக்கவோ ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.
கம்பஹா மாவட்டத்தின் களனி பகுதியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்ட பீல்ட் மார்ஷர் சரத் பொன்சேகா ஜகத் ஜயசூரிய தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களுக்கு எதிராக தெரிவிக்கப்படும் கூற்றுக்கள் குறித்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் மிகவும் பொறுப்புடன் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
நாட்டில் இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் இராணுவத்தில் இருந்தனர் என்பதற்காக அவர்கள் குற்றமிழைத்தால் தண்டனை வழங்காது அவர்களை பாதுகாக்க முற்படவில்லை என்று குறிப்பிட்ட சரத் பொன்சேகா மனம்பேரி படுகொலை வழக்கில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட படையினருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அதேபோல் அம்பிலிபிட்டிய மாணவர் படுகொலையுடன் தொடர்புடைய மேஜர் தர அதிகாரிகள் கப்டன்கள் உட்பட அனைத்து அதிகாரிகளும் தண்டிக்கப்பட்டதையும் நினைவுகூர்ந்த சரத் பொன்சேகா அப்போதைய அரச தலைவர்கள் மக்கள் பக்கம் இருந்து கொண்டு செயற்பட்டது போல் தற்போதைய அரச தலைவர்களும் அவ்வாறு பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இராணுவ சீரூடை அணிந்திருந்தனர் என்பதற்காக குற்றங்களுக்கு குற்றமிழைத்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தாதுஅவர்களை பாதுகாக்க அரசாங்கமும் அரச தலைவர்களும் முற்படுவார்களானால் அது மக்களுக்கு செய்யும் துரோகம் என்றும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை ஆட்சியில் உள்ளவர்களிடம் நீதியையே நாட்டு மக்கள் எதிர்ப்பார்த்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள சரத் பொன்சேகா அதனை நிறைவேற்றாது அரசாங்கமும் ஆட்சியாளர்களும் மக்களை ஏமாற்றக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மக்களின் வாக்கு வங்கிகளுக்காக போலியான தேசப் பற்றைக் காண்பித்து மக்களை தொடர்ந்தும் ஏமாற்றவும் முடியாது என்பதை அரசியல் வாதிகள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா அரசாங்கத்தில் உள்ளவர்கள் மற்றும் எதிரணியினரை எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply