செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேற்றம் 2030-க்குள் சாத்தியமில்லை : நாசா

சூரியக் குடும்பத்தில் பூமிக்கு அடுத்த படியாக இருக்கும் செவ்வாய் கிரகத்தில் உள்ள சூழ்நிலைகள் குறித்து ஆய்வு செய்யும் பணியில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான (நாசா) உள்ளது. சிவப்பு கிரகம் என்றழைக்கப்படும் செவ்வாயின் தட்ப வெட்ப நிலை, காலநிலை மாற்றம், தண்ணீர் போன்றவை குறித்து ஆய்வு செய்வதற்காக இந்தியவும் மங்கல்யான் என்ற செயற்கைக்கோளை அனுப்பியுள்ளது.

மனிதர்கள் வாழ்வதற்கான சூழ்நிலைகள் சாத்தியமாகும் பட்சத்தில் அங்கு மனிதர்களை அனுப்பி பரிசோதனை செய்வது மற்றும் எதிர்காலத்தில் மனிதர்களை அங்கு குடியேற்றம் செய்வது குறித்த திட்டமும் நாசாவின் பரிசீலனையில் உள்ளது.

 

இந்நிலையில், நாசாவின் விண்வெளி ஆய்வு பிரிவின் தலைவர் வில்லியம் ஜெர்ஸ்டன்மையர் 2030-க்குள் மனிதர்களை செவ்வாயில் குடியேற்றம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பல்வேறு ஆளில்லா செயற்கைக்கோள்களை பல பில்லியன் டாலர்களில் உருவாக்கி செவ்வாயில் நாசா ஆய்வு செய்து வரும் நிலையில், மனிதர்களை அங்கு குடியேறச் செய்யும் திட்டம் நாசாவின் முக்கிய கனவுகளில் ஒன்றாக இருந்து வருகிறது.

செவ்வாயில் மனிதர்களை குடியேறச் செய்யும் திட்டம் அதிக செலவு பிடிக்கக் கூடியது, எனவே தற்போதைய பட்ஜெட்டை கொண்டு இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியாது என வில்லியம் ஜெர்ஸ்டன்மையர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

நாசா மட்டும் அல்லாமல் பல்வேறு தனியார் நிறுவனங்களும் பல பில்லியன் டாலர்களை கொட்டி விண்வெளியில் மனிதர்கள் குடியேற்றம் செய்யும் திட்டத்திற்கு இரவு பகலாக உழைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply