அரசின் செயற்பாடுகளில் மறைப்பதற்கு எதுவுமில்லை : ஜனாதிபதி

அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மக்களிடமோ ஊடகங்களிடமோ மறைப்பதற்கு எதுவும் கிடையாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தில் குறைபாடுகள் நிலவுமானால் அதனை விமர்சிப்பதற்கு உரிமையுள்ளது எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி சாதாரண விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள தாம் தயார் எனவும் குறிப்பிட்டார்.

நாட்டு மக்கள் தம்மை ஜனாதிபதியாக நியமித்து எதிர்பார்த்ததை நிறைவேற்றுவதே தமது நோக்கம் எனத் தெரிவித்துள்ள அவர் சில குறைபாடுகள் நிலவுமானால் அதனை தெரிவிப்பது மக்கள் உரிமையாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகட்டும்

அமைச்சரவையின் தீர்மானத்துக்கு எதிராக நீதிமன்றத்துக்கு செல்வதானால் அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகி அதனை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் நிலையில் அமைச்சரவையின் தீர்மானத்துக்கு எதிராக நீதிமன்றத்துக்குச் செல்வது மற்றும் அமைச்சரவையில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் தொடர்பில் பகிரங்கமாக விமர்சனங்களை  மேற்கொள்வது தவறானது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பத்திரிகைகளின் ஆசிரியர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

அமைச்சரவை தீர்மானங்களுக்கு எதிராக நீதிமன்றம் செல்ல வேண்டுமானால் அவர்கள் அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகி அதனை மேற்கொள்ள முடியும். அவ்வாறு அமைச்சரவைத் தீர்மானங்களை விமர்சனம் செய்வதானது அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பை மீறிய செயற்பாடாக அது அமையும்.

அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பை மீறுவது தொடர்பில் நீதிபதி மார்க் பெர்னாண்டோவினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு ஒன்று உள்ளதை நினைவுபடுத்த முடியும். அதேவேளை ஜனாதிபதியின் செயலாளர் பீ. பி. ஜயசுந்தர தொடர்பில் சில அமைச்சர்கள் பகிரங்கமாக விமர்சனங்களை வெளியிட்டுள்ளது தவறானதாகும். அத்தகைய செயற்பாடுகள் மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தும். அனைத்து விடயங்களுக்கும் அவரே பொறுப்பு என மக்கள் தவறாக சிந்திக்கவும் அது வழிவகுக்கும்.

சேதன பசளை திட்டத்திற்கு எத்தகைய ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை

நாம் ஆக்கபூர்வமாக ஆரம்பித்த சேதனப்பசளை ஊக்குவிப்புத் திட்டத்துக்கு விவசாய அமைச்சின் எத்தகைய ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை. அதனால் நாம் எதிர்பார்த்ததை மேற்கொள்ள முடியாமல் போயுள்ளது. சேதனப் பசளை செயற்திட்டம் தொடர்பில் விவசாய அமைச்சானது விவசாயிகள் மற்றும் மக்களுக்கு தெளிவூட்டவில்லை. விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் மட்டுமே தனித்து செயற்பட முடியாது. சேதனப் பசளை செயற்திட்டத்தின் கீழ் நூற்றுக்கு 30 வீதம் சேதனப்பசளை , மற்றும் நூற்றுக்கு 70 வீதம் இரசாயனப் பசளை உபயோகப்படுத்துதல் தொடர்பில் ஆரம்பத்தில் தெரிவித்த போதும் பின்னர் அது இரண்டையும் கலந்து உபயோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சீனாவின் உரக்கப்பல், தரம் உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்னரே வங்கியில் எல். சி. ஆரம்பிக்கப்பட்டமை தவறாகும். தம்மை விமர்சிப்பவர்கள், விவசாயிகளுக்கு கிடைத்துள்ள இலாபம் தொடர்பில் எதையும் தெரிவிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாகவே நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் டொலர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அது எமது நாட்டுக்கு மட்டுமன்றி அனைத்து சர்வதேச நாடுகளுக்கும் ஏற்பட்டுள்ள துரதிருஷ்டமான நிலைமையாகும். அதனால் அப்பிரச்சினையை வைத்துக்கொண்டு தம்மீது மட்டும் குற்றம் சுமத்துவது தவறாது.

கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை குறைவடைந்துள்ளமை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மூலம் கிடைக்கும் வருமானம் குறைவடைந்துள்ளமை டொலர் நெருக்கடிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

தாம் பதவிக்கு வந்து ஒரு வருட காலத்துக்கு முன்பதாக நாட்டில் கொரேனா வைரஸ் சூழ்நிலை உருவாகியது. அதனால் திட்டமிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் போயுள்ளது. எரிபொருள் இறக்குமதிக்கு வருடாந்தம் 360 மில்லியன் டொலரையும், சிரட்டைக் கரி இறக்குமதிக்காக வருடாந்தம் 3 மில்லியனையும் செலவிட வேண்டியுள்ளது. அது எமது பொருளாதாரத்தில் சுமக்க முடியாதவொன்றாகும். அதிலிருந்து நாம் மீள்வதற்கு மீள் புத்தாக்க மின் உற்பத்திக்கு செல்ல வேண்டியுள்ளது. எதிர்காலத்தில் அதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். அவ்வாறான 800 திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அதற்காக 150 டெண்டர்கள் கிடைத்துள்ளன என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தமக்கு மேலும் மூன்று வருட ஆட்சிக்காலம் உள்ள நிலையில் திட்டமிட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply