இலங்கைக்கு ரூ.6,750 கோடி கடன் உதவி: இந்தியா இந்த மாதம் வழங்குகிறது
கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் இலங்கை நிதி நெருக்கடியில் தவிக்கிறது. இந்த நிலையில், இந்தியாவிடம் அந்த நாடு உணவுப்பொருட்களும், மருந்து பொருட்களும் வாங்குவதற்கு 1 பில்லியன் டாலர் (சுமார் ரூ.7,500 கோடி) கடன் உதவியை நாடி உள்ளது.
ஆனால் இதற்கான ஆவணங்களை தயார் செய்வதற்கு அதிக காலம் பிடிக்கும் என தகவல்கள் வெளியாகின.
இது தவிர்த்து 900 மில்லியன் டாலர் (சுமார் ரூ.6,750 கோடி) கடன் உதவியையும், இந்தியாவிடம் இலங்கை நாடி உள்ளது. இது 2 கடன்களாக அமைகின்றன. அதில் ஒன்றாக 500 மில்லியன் டாலர் கடன் உதவி, கச்சா எண்ணெய் வாங்குவதற்கான கடனாகவும் கேட்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இலங்கை நிதி மந்திரி பசில் ராஜபக்சே வரும் 10-ந் தேதி இரண்டாவது முறையாக டெல்லி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இலங்கைக்கு இந்தியா இந்த மாதம் 900 மில்லியன் டாலர் (சுமார் ரூ.6,750 கோடி) கடன் உதவியை வழங்க தயாராக இருப்பதாக இலங்கை பத்திரிகை ஒன்றில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதே நேரத்தில் இலங்கையில் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் இன்னும் விடுவிக்காத நிலையில் அந்த நாட்டுக்கு இந்தியா கடனுதவி வழங்க தயாராக இருக்கிறது என தகவல் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply