இரத்த வெள்ளத்தில் ஆணின் சடலம் : கரடியனாறில் சம்பவம்

கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை பகுதியில் உள்ள வீடொன்றில் இரத்த வெள்ளத்தில் கிடந்தவாறு ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை (27) இடம்பெற்றுள்ளது.

மது போதைக்கு அடிமையான ஒருவர் தனது வீட்டில் தனிமையில் இருந்தபோது வீட்டின் ஜன்னல் கண்ணாடியை கையால் ஓங்கி குத்தியதால், முழங்கைக்கும் புஜத்துக்கும் இடையிலான தசைப்பகுதியின் நாடி நரம்பு அறுந்து, அதிகளவு குருதி வெளியேறி சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின்போது தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த நபர் ஒரு குழந்தையின் தந்தையாவார்.

இவர் போதைக்கு அடிமையாகி மனைவியுடன் முரண்பட்டமை தொடர்பாக பல தடவைகள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளமையும் இதன்போது தெரியவந்துள்ளது.

அன்றைய தினமும் போதையில் மனைவியை தாக்க முற்பட்டபோது மனைவி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். பிறகு, கோபத்தில் அந்த நபர் ஜன்னல் கண்ணாடியை உடைத்தபோதே இரத்தம் வெளியேறி உயிரிழந்துள்ளார்.

இதனை அறிந்த கரடியனாறு பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று முறைப்பாட்டினை பதிவு செய்ததுடன், பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர், பொலிஸ் பொறுப்பதிகாரியின் வேண்டுகோளை ஏற்று மரண விசாரணைகளை தொடர்ந்தார்.

சடலம் கண்டெடுக்கப்பட்ட அறை முழுவதும் இரத்த வெள்ளமாக காட்சியளித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சடலம், பிரேத பரிசோதனை நிறைவடைந்த பின்னர் உவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதிக குருதி வெளியேற்றமே இந்த மரணத்துக்கு காரணம் என பரிசோதனை அறிக்கையினூடாக கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply