சிங்கள சமூகத்தோடு இணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்ப நாம் தயார் : சபையில் கஜேந்திரன் எம்.பி

நாட்டில் சமஸ்டி முறையிலான அரசியலமைப்பு கொண்டுவரப்படும் பட்சத்தில் சிங்கள சமூகத்தோடு சேர்ந்து இந்த நாட்டை கட்டியெழுப்ப நாங்கள் தயாராக இருக்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்தார். நேற்றைய(24) பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.

இப்போது ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமா இல்லையா என்று தெரியவில்லை. அதற்கான நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றது . இந்த வேளையிலே நாங்கள் கேட்கின்றோம் ஜனாதிபதி வேட்பாளர்கள் ஒற்றையாட்சி முறையை அழித்து சமஸ்டி ஆட்சி முறை என்ற துணிச்சலான முடிவை எடுக்க வேண்டும் என்பதை எதிர்பார்க்கின்றோம்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நிலைப்பாடு வடகிழக்கு தமிழ் மக்கள் இந்த தேர்தலை பகிஸ்கரிக்க வேண்டும் என்பதாகும்.

ஏனென்றால் ஒற்றையாட்சி முறையினை ஒழிக்க தயாராக இல்லை என்றால் ஒற்றையாட்சியை பலப்படுத்துகின்ற செயற்பாட்டை செய்து தேர்தலில் போட்டியிடப் போகின்றீர்கள் என்றால் அந்த கொள்கை அடிப்படையில் வருகின்ற எந்த வேட்பாளருக்கும் தமிழ் மக்கள் வாக்களிக்க கூடாது.

தேர்தல் நடந்தே ஆக வேண்டும். அது நடைபெறுகின்ற போது நாங்கள் அதை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும். புறக்கணிக்கின்ற போது உங்களுக்கு எங்களுடைய வாக்குகள் தேவை என்று சொன்னால் நீங்கள் எங்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது எங்களுடைய அணுகுமுறையாக இருக்கின்றது.

இவ்வாறானதொரு சூழலில் இந்த தேர்தலிலே பெரும்பாலான தமிழர்கள் விரக்தி நிலை அடைந்து இருக்கின்றார்கள்.

வெறுப்பு அடைந்த நிலையில் இருக்கும் மக்களோடு சென்று, தேர்தலுக்கு வாக்களியுங்கள் என்று கேட்க முடியாத நிலையில் வடபகுதியில் இருக்கக்கூடிய சிவில் அமைப்புக்களையும் அரசியல்வாதிகளையும் வைத்துக் கொண்டு பொது வேட்பாளர் என்கின்ற ஒரு சதி அரங்கேற்றப்படுகின்றது .

இந்த நாட்டிலே இனவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அப்படியென்றால் ஒற்றையாட்சி முறை ஒழிக்கப்பட்டு சமஸ்டி அரசியலமைப்பைக் கொண்டுவர வேண்டும்.

சமஸ்டி அரசியலமைப்பின் ஊடாக தமிழ் மக்களினதும் முஸ்லீம் மக்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். சமத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும்.

இன்றைய நாள் இனவழிப்பிற்குரிய நாள் 41 ஆண்டுகளுக்கு முன்னர் பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று இனவழிப்பை கட்டவிழ்த்து விட்டு சொத்துக்களை அழித்து இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்ட நாள்.

அதற்கு அடுத்தபடியாகவும் 2009ம் ஆண்டிலே ஒன்றறை இலட்சம் மக்களை கோட்டபாய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக இருந்து மஹிந்த ராஜபக்ச தலைமையிலே இந்தப் படுகொலை மேற்கொள்ளப்பட்டது. அவற்றிற்கெல்லாம் நீதி இன்றுவரை கிடைக்கவில்லை.

சிங்கள சமூகத்தோடு சேர்ந்து நாட்டை கட்டியெழுப்பத் தயாராக இருக்கின்றோம். அது நடைபெற வேண்டுமாயின் ஒற்றையாட்சி முறை ஒழிக்கப்பட்டு தேசம், உரிமை ,சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படுவதன் அடிப்படையில் சமஸ்டி அரசியலமைப்பு கொண்டுவரப்படல் வேண்டும்.

இங்கே ரணில் விக்கிரமசிங்கவுக்கு 2 ஆண்டுகள் கால நீடிப்பு வழங்க வேண்டும் என்று சொல்கின்ற வடகிழக்கைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே அங்கே பொதுவேட்பாளர் வேண்டும் என்று சொல்லி பொது ஒப்பந்தத்திலே கையொப்பமிடுகிறார்கள்.

இது ரணில் விக்கிரமசிங்க, அநுர குமார திஸாநாயக்க, சஜித் பிரேமதாஸ இந்த 3 பேருக்கும் ஒரு தேவை இருக்கின்றது. தமிழர்கள் பகிஸ்கரிப்பு என்ற ஆயுதத்தை கையில் எடுக்கக் கூடாது. அவர்கள் இலங்கையர் என்கின்ற ஒரு அடையாளத்தை நிலைநாட்டுகின்ற நிலமை வரக்கூடாது .

அப்படியானால் இந்த தேர்தல் பகிஸ்கரிப்பு தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்காக பொதுவேட்பாளர் என்கின்ற ஒரு நாடகம் அரங்கேற்றப்படுகின்றது.

எங்களைப் பொறுத்த வரையிலே இந்த தேர்தலை வடகிழக்கு தமிழர்கள் முற்றாக புறக்கணிக்க வேண்டும் என்பதுதான். அதற்கு அழைப்பு விடுக்கின்றோம். நீங்கள் தமிழர்களை அரவணைக்க வேண்டுமாயின் ஒற்றையாட்சியை நீக்குகின்றோம் என்ற அறிவிப்பை வெளிப்படையாக கூறும் போதுதான் இந்த தேர்தலில் பங்கெடுப்பதா இல்லையா என்ற முடிவை நாங்கள் எடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply