மரண வீட்டில் ஒப்பாரி வைப்பவர்களைப் போல செயற்படும் அநுர தரப்பு: சபா.குகதாஸ்
மரண வீட்டில் ஒப்பாரி வைக்கும் பெண்களைப் போல வடக்கு மாகாணத்தில் அநுர அரசாங்க அமைச்சர்கள் மாறி மாறி படையெடுத்து உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பொய் நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது வடக்கு மாகாணத்தில் தேசிய மக்கள் சக்தி என சொல்லப்படுகின்ற அனுரகுமார திசாநாயக்கவினுடைய அமைச்சரவை அமைச்சுக்கள் இந்த நாட்டின் ஒன்பது மாகாணங்களிலிலும் இருக்கின்றன.
ஆனாலும் ஏனைய மாகாணங்களை புறம்தள்ளி வடக்கு மாகாணத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிற்பாடு பெருமளவிலான அமைச்சர்கள் அவர்களின் அதிகாரிகள் எல்லோருமே வடக்கு மாகாணத்தில் குறிப்பாக கிளிநொச்சி ,முல்லைத்திவு ,யாழ்ப்பாணம் ,மன்னார் மற்றும் வவுனியா போன்ற மாவட்டங்களில் தான் அவர்களது பிரவேசமாக அமைகிறது.
அது மாத்திரமல்லாது தேர்தல் விதிமுறைகளை தாண்டி அவர்கள் பல்வேறு உத்தரவாதங்கள் பல்வேறு அறிக்கைகள் போன்றவற்றின் மூலமாக உள்ளுராட்சி தேர்தலில் தமிழ் மக்ளுடைய வாக்குளை தங்களுடைய கட்சி சார்ந்த பிரதிநிதிகளுக்கு பெற்றுக்கொடுக்க மிக தீவிரமாக வாக்குறுதிகளை அள்ளி வழங்குகின்றனர்.
தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பிற்பாடு மக்களுக்கு சலுகை வழங்குவதாக சொல்லப்படுகின்ற விடயங்கள் எல்லாமே தேர்தல் விதிமுறைகளை மீறியதாகத்தான் இருக்கிறது.
மேலும் ஜனாதிபதி அவர்கள் கூறிய கருத்து அண்மையில் பெரும் சர்சையாக்கியது.
தங்களுடைய பிரதிநிதிகள் ஆட்சி அமைகின்ற சபைகளுக்கு கண்மூடிக்கொண்டு நிதிவழங்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்திருந்தமை மிகப்பெரிய ஒரு முரண்பாட்டை ஏற்படுத்தியிருந்தது.
ஜனாதிபதி ஒன்றை விளங்கிக்கொள்ளவேண்டும் தேர்தலில் தெரிவு செய்யப்படுகின்ற பிரதிநிதிகள் சபைக்கு வருகின்ற பொழுது அது மக்களினுடைய தெரிவாக இருக்கும்.
அதில் கள்ளர்கள் என்றோ ஊழலற்றவர்கள் என்றோ பாகுபடுத்த முடியாது அப்படி பாகுபடுத்த முடியுமாக இருந்தால் அது ஜனநாயகம் அல்ல அது ஒரு சர்வாதிகாரம்.
எனவே இப்படியான சிந்தனை போக்குகளில் இருந்து ஜனாதிபதி மாறவேண்டும்.
வெறுமனே ஊழலற்ற தேசம் , ஊழல்வாதிகளை பிடிக்கின்றோம் என்று வரிக்கு வரி கூறுகின்ற ஆட்சியாளர்கள் இதுவரை ஊழலை செய்த அதற்க்கு முக்கிய காரணமாக இருந்த எந்தவொரு முக்கியமான நபர்களை கைது செய்யவும் இல்லை அவர்களது பெயர் உச்சரிக்கப்படவும் இல்லை என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார் .
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply