பள்ளிப் பேருந்தின் உடைந்த தளம்: ஓட்டை வழியாக விழுந்த சிறுமி சக்கரத்தில் சிக்கி பரிதாப பலி

உத்தரப் பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிப் பேருந்தின் தளம் உடைந்ததால், ஓட்டை வழியாக கீழே விழுந்த 7 வயது சிறுமி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த விபத்து அனன்யா என்ற யுகேஜி (UKG) படித்து வந்த சிறுமிக்கு நிகழ்ந்துள்ளது. பள்ளி முடிந்து மற்ற மாணவர்களுடன் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பேருந்தின் பின்தளத்தில் இருந்த ஓட்டை வழியாகச் சிறுமி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தைக் கண்டு பேருந்தில் இருந்த மற்ற மாணவர்கள் கூச்சலிட்டனர். ஆனால், ஓட்டுநர் பேருந்தை நிறுத்துவதற்குள் பின்சக்கரம் சிறுமியின் மீது ஏறியது. அந்தப் பேருந்து மிகவும் பழையதாகவும், தளம் துருப்பிடித்த நிலையிலும் இருந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமியின் மீது சக்கரம் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விபத்துக்குக் காரணமான பேருந்தை அடித்து நொறுக்கிய கிராம மக்கள், பேருந்து ஓட்டுநரைப் பிடித்து சரமாரியாகத் தாக்கினர். சிறுமியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு மக்கள் சாலையை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பேருந்து ஓட்டுநரை கைது செய்துள்ளனர்.

பள்ளி வாகனங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது. unfit பேருந்துகளை இயக்க அனுமதித்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். தொடர்ந்து இத்தகைய விபத்துக்கள் நிகழ்வது பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply