நாம் அமெரிக்காவுக்கே எமது பூரண ஒத்துழைப்பை வழங்குகிறோம் – பத்தரமுல்ல சீலரத்ன தேரர்
இலங்கை அரசாங்கத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டுள்ள உடன்படிக்கைகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கோ அல்லது அரசியல் கட்சித் தலைவர்களுக்கோ எவ்வித தெளிவும் இல்லை எனவும் அவற்றை உடனடியாக பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (8) ஊடகங்களுக்குக் கருத்துத் வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
தற்போதைய பூகோள அரசியல் சூழலில் இஸ்ரேலுக்கும் அமெரிக்காலுக்கும் எமது முழுமையான ஆதரவை வழங்குகிறோம். ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் தற்போது மோதல்கள் நிலவி வருகின்ற போதிலும் நாம் அமெரிக்காவுக்கே எமது பூரண ஒத்துழைப்பை வழங்குகிறோம். குறிப்பாக இலங்கையில் நிலவிய யுத்த காலத்தின் போது இஸ்ரேல் எமக்கு வழங்கிய உதவிகளை எம்மால் மறக்க முடியாது. அதேவேளை ஈரானின் பங்களிப்புகளையும் நாம் நன்றியுடன் நினைவுகூருகிறோம்.
ஜனாதிபதிக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டுள்ள ஒப்பந்தங்களில் என்ன உள்ளடக்கப்பட்டுள்ளது என்பது குறித்து எவருக்கும் தெரியாது. இது இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. எனவே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக அல்லது அமெரிக்க தூதரகத்தின் வாயிலாக இந்த உடன்படிக்கைகள் குறித்து நாம் விபரங்களைக் கோரவுள்ளோம். எதனையும் பகிரங்கமாகச் செய்ய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.
தற்போதைய அரசாங்கம் சில ஆக்கபூர்வமான முடிவுகளை எடுக்க முற்படும் போது சில தரப்பினர் அதற்கு முட்டுக்கட்டை போட்டு இழுத்தடிக்கின்றனர். எமது நாட்டின் மரத்தளபாட உற்பத்தி உள்ளிட்ட பல விடயங்களை சர்வதேச தரத்திற்கு கொண்டு வர வேண்டிய தேவை உள்ளது. அரசாங்கம் சரியான தீர்மானங்களை எடுக்கும் போது அதற்கு ஆதரவளிக்க நாம் தயார். ஆனால், சர்வதேச ஒப்பந்தங்கள் விடயத்தில் வெளிப்படைத்தன்மை அவசியம் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply