இலங்கை-இந்திய நல்லுறவு சர்வதேசத்துக்கு முன்னுதாரணம் : பிரதீபா
சர்வதேச நாடுகள் முன்னுதாரணமாகக் கொள்ளக்கூடிய வலுவான நல்லுறவுகள் இலங்கை – இந்தியா இடையில் நிலவுவதாக இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டேல் தெரிவித்துள்ளார். இவ்விரு நாடுகளுக்குமிடையிலான தொடர்புகளை மேலும் உயர்ந்த நிலையில் வைத்திருக்க இலங்கையின் வடக்குப் பிரதேசத்தில் உருவாக்கப்பட்டுள்ள அமைதியான சூழல் மிகவும் உதவுவதாகவும் அவர் மேலும் கூறினார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் அவரது தூதுக் குழுவினருக்கும் நேற்று ராஷ்ட்ரபதி பவனில் இராப் போசனம் வழங்கிய வைபவத்தில் உரையாற்றியபோதே இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டேல் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயம் இரு நாடுகளிடையே உள்ள உறவுகளை மேலும் பலப்படுத்தியுள்ளது. தேர்தல்கள் மூலம் ஜனாதிபதி அடைந்துள்ள வெற்றிகள் பாராட்டுக்குரியவை. இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் உள்ள நெருங்கிய உறவுகள் மூலம் அந்நாட்டின் முக்கிய பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வைக் கண்டு, சகல இன மக்களும் புதிய உலகொன்றில் பிரவேசிக்கச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு இந்தியா பூரண ஒத்துழைப்பு வழங்கும். தமிழ் நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களின் உத்தேச இலங்கை விஜயம் அதற்கு பெரும் உந்து சக்தியாக அமையும்.
இரு நாடுகளுக்குமிடையில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின் சாதகமான பயன்கள் தொடர்ந்தும் முன்கொண்டு செல்லப்பட வேண்டும். அத்துடன் இரு நாடுகளிடையே வர்த்தகம் மற்றும் முதலீடுகள் மேலும் ஊக்குவிக்கப்படவேண்டும்” என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply