வடக்கில் தமிழர்களுக்கு உரிமைகள் இருக்கின்றன நாம் தமிழர்களுடன் இருக்கின்றோம் காங்கிரஸ் கட்சித் தலைவி : சோனியா காந்தி
இலங்கைத் தமிழர் பிரச்சினைக் குறித்து தாம் தொடர்ச்சியாக அவதானித்து வருவதாகவும் இது குறித்து இலங்கை அரசாங்கத்துடன் தொடர்புகளைப் பேணி வருவதாகவும் இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி தெரிவித்துள்ளார். லண்டனில் இடம்பெற்ற 14 பொதுநலவாய நாடுகளின் விரிவுரையில் கலந்து கொண்டிருந்த போது உலகத் தமிழர் ஒன்றியம் சார்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து முகாமில் உள்ள மக்கள் எவ்வித தாமதமும் இன்றி மீள்குடியேற்றப்பட வேண்டும் என்பதில் இரு கருத்துக்களுக்கு இடமில்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறப்படும் விடயம் குறித்து எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள சோனியா காந்தி, சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டமை குறித்த வீடியோ காட்சிகள் சிலவற்றை தான் பார்த்ததாகவும் அது மிகவும் கண்டிக்கத்தக்க விடயம் எனவும் கூறியுள்ளார்.
மேலும் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்படுமாயின் அதற்கு ஆதரவு வழங்குவீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டபோது அது குறித்து கருத்து வெளியிட்ட சோனியா காந்தி மறுத்துள்ளார்.
வடக்கில் படையினர் பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் விடயம் குறித்து சோனியா காந்தியிடம் வினவப்பட்டபோது இலங்கையில் அவ்வாறானதொரு நிலை நடந்திருப்பின் அது மிகவும் கண்டிக்கத்தக்க விடயம் என குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் தமிழர்களுக்கு உரிமைகள் இருப்பதாகவும் தாங்கள் எப்போதும் தமிழர்களுடன் இருப்பதாகவும் இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply