இலங்கைக்குப் பேராபத்து காத்திருக்கிறது – விக்ரமபாகு கருணாரட்ன

எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் பூகோள காலக்கிரம மீளாய்வுத் தொடரில் இலங்கைக்குப் பேராபத்து காத்திருப்பதாக புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். கடந்த ஜெனிவாக் கூட்டத்தொடரில் சர்வதேசத்துக்கு இலங்கை வழங்கிய உறுதிமொழிகள் எவையும் இன்றுவரை நிறைவேற்றப்படாத நிலையில், உலக நாடுகள் அனைத்தும் இலங்கையின் மனித உரிமை நிலைவரம் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான அநீதிகள் குறித்து கேள்விகளை தொடுக்கத்தயார் நிலையில் உள்ளன.
அதுமட்டு மன்றி, உள்நாட்டிலும் மஹிந்த அரசுக்கு ஒரு பயங்கரமான நெருக்கடி நிலை ஏற்படவுள்ளது எனவும் விக்கிரமபாகு கருணாரட்ன கூறியுள்ளார்.
நாட்டில் மீண்டும் பிரிவினைவாதப் போரை ஏற்படுத்த  பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பிள்ளையார்சுழி போட்டுள்ளார். இவரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இனவாதப் போர் தற்போது நாட்டில் அதியுச்சம் அடைந்துள்ளது.
13 ஆவது திருத்தத்தை இல்லாதொழிப்பது குறித்து பேசுவதற்கு கோத்தபாயவுக்கு அருகதையில்லை. அவர் ஓர் அரச அதிகாரி. இதை புரிந்துகொள்ளாமல் அவர் எக்காளமிடக் கூடாது. 13 ஆவது திருத்தம் தமிழர்களுக்குத் தீர்வாகாது என்றால் அவர்களுக்கான தீர்வு என்ன எனவும் விக்கிரமபாகு கேள்வியெழுப்பியுள்ளார்.
நாட்டில் மீண்டும் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த அரசின் உயர்மட்ட நடவடிக்கைகளை சாதகமாக அமைத்துக்கொள்வதற்காகக் கீழ் மட்டத்தில் சிறுபான்மை மக்களது வழிபாட்டுத் தலங்களும், புனித சின்னங்கள் மீது தாக்குதல் நடவடிக்கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
நாட்டில் இனவாதத்தைத் தூண்டும் வகையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கவேண்டும் என்ற கோஷம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் எழுப்பப்பட்டுள்ளது. இதனடிப்படையில்தான் சிறுபான்மை மக்களது வழிபாட்டுத் தலங்களைத் தாக்கும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
அடுத்தாண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நாட்டில் சமர்ப்பிக்கப்படவிருக்கின்ற நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து மாபெரும் அரச எதிர்ப்புப் போராட்டம் நாடு முழுவதுமுள்ள மக்களால் ஆரம்பிக்கப்படவுள்ளது.
எனவே, இவற்றைக் கட்டுப்படுத்தி மக்களைத் திசைதிருப்பவே அரசு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது  என கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply