இலங்கையின் நிதி நிலை அடுத்த வருடம் மோசமாகும்

இலங்கையின் நிதித்துறை கட்டமைப்பு மற்றும் நிர்வாகம் பலவீனமாகவும், ஆபத்தான நிலையிலும் உள்ளதாக, சர்வதேச பொருளாதார மதிப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான ஃபிட்ச் தெரிவித்துள்ளது.  கடந்த ஓரிரு வருடங்களாகவே இலங்கையின் நிதி நிலைமை ஸ்திரமற்ற சூழலில் இருந்தது எனவும், அதன் உச்சகட்டமே ஃபிட்ச் நிறுவனத்தின் கணிப்பீடு என்றும் பொருளாதார ஆய்வாளர் கலாநிதி முத்துகிருஷ்ண சர்வாநந்தன் தெரிவித்தார்.

இலங்கையின் மத்திய வங்கி அரசு வங்கிகள் மட்டுமல்லாமல் தனியார் வங்கிகளையும் அரசின் கொள்கைகளுக்கு ஏற்றவாறு வற்புறுத்தி வருவது நிதித்துறையில் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது எனவும் அவர் கூறுகிறார்.

மத்திய வங்கியின் தலையீடு ஏற்றுக்கொள்ளக் கூடிய அளவை விட அதிகமாக இருப்பதால் தான், இந்த நெருக்கடி நிலை தோன்றியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

கடந்த சில ஆண்டுகளாகவே இலங்கையின் நிதித்துறை பெருமளவில் வெளிநாட்டு முதலீடுகளிலேயே தங்கியுள்ள சூழலில், ஃபிட்ச் நிறுவனத்தின் கருத்துக்கள், இலங்கை அரசு மற்றும் நிதிநிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கடன் வாங்குவதை மேலும் சிக்கலாக்கும் வாய்ப்பு உள்ளது எனவும் சர்வானந்தன் கூறுகிறார்.

இலங்கை அரசு இப்படியான அமைப்புகள் கூறும் கருத்துக்களையோ பரிந்துரைகளையோ ஏற்று நடக்கக் கூடிய சந்தர்ப்பம் இருப்பதாகத் தெரியவில்லை எனவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

இந்த ஆண்டை விட அடுத்த ஆண்டில் (2013) இலங்கை மேலும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளும் எனவும் கருத்து வெளியிடுகிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply