‘வாழ்வின் எழுச்சி’ சட்டமூலம் பற்றி சுரேஷுக்கு தெளிவில்லை – பிரபா கணேசன்

13 ஆவது திருத்தத்தை ஆதரித்த அரசு தரப்பு எம்.பி.க்கள் திவிநெகுமவை ஆதரிப்பார்களேயானால் அவர்கள் கோமாளிகள் என கூறியிருக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் எம்.பியான சுரேஷ் பிரேமசந்திரன் தான் அங்கம் வகிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய முடியாத ஒரு அரசியல் கோமாளியாவார். என்பதுடன் திவிநெகும என்ற ‘வாழ்வின் எழுச்சி’  சட்டமூலம் பற்றி அவருக்கு தெளிவில்லை’ என்று  ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில்  அவர் தெரிவித்ததாவது,

’13 ஆவது திருத்த சட்டத்தை அரச பங்காளி கட்சிகள் இல்லாதொழிக்க முற்படும்போது அந்த திருத்தத்தை பலப்படுத்துவதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் எடுக்கப்பட்ட முயற்சியின் பிரகாரமே நான் உட்பட 31 எம்.பிக்கள் தமது அபிலாஷைகளை ஜனாதிபதிக்கு தெரிவித்திருந்தோம்.

யாழ்.மாவட்டத்தின் வாக்குகளை அடிப்படையாகக் கொண்ட சுரேஷ் பிரேமச்சந்திரன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிகளை கொச்சப்படுத்துகின்றார்.

யார்? எதை செய்தாலும் அது எமது தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய விடயமாக இருக்கின்றதா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். தமிழ் மக்களுக்கு தாங்கள் தான் தலைவர்கள் என்ற மமதையில் தமிழ் மக்கள் விடயத்தில் நன்மை செய்யும் ஏனைய அரசியல் தலைவர்கள் ஊடகம் மூலமாக கேவலப்படுத்துவது இன்று சர்வசாதாரணமாகி விட்டது.

‘வாழ்வின் எழுச்சியான’ திவிநெகும சட்ட மூலத்தைப் பற்றி சுரேஷ் பிரேமசந்திரன் எம்.பிக்கு சரியான தெளிவில்லை. இச்சட்டமூலம் பற்றிய தெளிவை அவருக்கு வழங்க தயாராக இருக்கின்றேன். இச்சட்ட மூலத்தின் முழுமையான விபரங்களை தெரிந்து கொள்ளாமல் வெறுமனே ‘எதிர்கட்சி அரசியல்;’ செய்வது அரசியல் நாகரீகமல்ல.

திவிநெகும சட்டமூலத்திற்கும் மாகாணசபை முறைமைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இவருடன் பகிரங்க விவாதத்திற்கு நான் வரத் தயாராக இருக்கின்றேன். ஏனெனில் திவிநெகும சம்பந்தமாக அனைத்து விபரங்களும் என்னிடம் இருக்கின்றன. மாகாணசபையை திவிநெகுமவுடன் இணைப்பதற்கான எமது ஆலோசனைகளையும் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டு சட்ட மூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

இவை எதனையும் தெரிந்து கொள்ளாமல் தனது மாவட்ட அரசியல் இலாபத்திற்காக அரசியல் கோமாளிதனத்தை சுரேஷ பிரேமசந்திரன் வெளிப்படுத்துகின்றார். தமிழ் தேசிய கூட்டமைப்பு என்று ஒரு அரசியல் கட்சி நடைமுறையில் இல்லை. அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படாத இந்த கூட்டமைப்பை பதிவு செய்வதற்கு ஏன் இவருக்கு முடியவில்லை.

இவ்வாறானவர்களை புரிந்துகொண்டதனால்தான் கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் கூட்டமைப்பை விட்டு இன்று விலகி நின்று அரசியல் செய்கின்றார்கள். ஆகவே தங்களிடம் குறைகளை வைத்துக்கொண்டு மற்றவர்களை ஊடகம் மூலமாக ஏளனம் செய்யும் சுரேஷ் பிரேமசந்திரன் தான் உண்மையான கோமாளியாவார்.

அரசாங்கத்திற்கு உள்ளே இருந்து கொண்டு மக்களுக்கு தேவையான அபிவிருத்தி பணிகளையும் செய்து கொண்டு அதே நேரத்தில் இன்று அரச பங்காளி கட்சிகள் 13 ஆவது திருத்தத்தை இல்லாதொழிப்பதற்கு முயற்சிக்கும் பொழுது அதனை எதிர்த்து அரச தரப்பு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்று எடுக்கப்பட்ட இவ் முன்மாதிரியான முயற்சியை ஏளனம் செய்வது முறையற்ற செயலாகும்.

எமது இச் செயற்பாட்டினால் அரச தரப்பிலிருந்து எப்படிப்பட்ட அழுத்தங்களை நாங்கள் எதிர் நோக்கியிருக்கின்றோம் என்பதையும் இவருக்கு தெரிவதில்லை.

இருப்பினும் எவர் எம்மை ஏளனம் செய்தாலும் எமது முற்சியிலிருந்து நாங்கள் பின் வாங்க மாட்டோம். தமிழ் தேசியம் பேசுவதும் ஊடக அறிக்கைகள் விடுவதிலும் பார்க்க எமது இம்முயற்சி தமிழ் மக்களுக்கான யதார்த்த ரீதியான விடயம் என்பது தமிழ் புத்தி ஜீவிகளுக்கு நன்றாக தெரியும். யாழ் மாவட்டத்திலே வாக்குகளைப் பெற்று விட்டு கொழும்பு மாவட்டத்தில் இருந்து கொண்டு ஊடக அறிக்கை செய்யும் அரசியல்வாதிகளுக்கு இது புரிந்தும் புரியாதவர்களாக இருக்கின்றார்கள் என்பதும் மக்களுக்கும் புரியும்’.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply