நாட்டை பிளவுபடுத்த திஸ்ஸ விதாரண, வாசுதேவ நாணயக்கார முயற்சி

புலம்பெயர் தமிழர்கள் மற்றும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புடன் இணைந்து இந்த நாட்டை பிளவுப்படுத்தி மீள தமீழத்தை உருவாக்கும் நோக்குடன், அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களான திஸ்ஸவிதாரண மற்றும் வாசுதேவ நாணயக்கார போன்றோர் இன வாதக் கருத்துகளை தமிழ் பத்திரிகையினூடாக வெளியிட்டிருக்கின்றனர் என தேசிய சுதந்திர முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.வடக்கில் இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும். இராணுவ அதிகாரியை வடக்கில் ஆளுநராக நியமிக்கக்கூடாது. மற்றும் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வினை வழங்கவேண்டும் என்று கருத்துக்களையே இந்நாட்டை பிளவுப்படுத்த முனைகின்றதாகக் கூறும் நிலையில், இந்நாட்டை பிளவுப்படுத்த முனையும் குழுக்களுடன் திஸ்ஸவிதாரண மற்றும் வாசுதேவ நாணயக்கார செயற்படுவது வேதனையளிப்பதாகவும் அக்கட்சி விசனம் தெரிவித்துள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டின்போதே அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் ஜயந்த சமரவீர இதனைத் தெரிவித்தரர்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,
வடமாகாண ஆளுநராக பதவியிலிருக்கும் இராணுவ அதிகாரியான ஜி.ஏ.சந்திரசிறியை நீக்கி, சிவில் சமூகத்தவரொருவரை ஆளுநராக நியமிப்பதுடன் இந்நாட்டின் தமிழ் மக்களுக்கு உரிய அரசியல் தீர்வொன்றை முன்பு வழங்கவேண்டுமென்ற கருத்தை கடந்த சில தினங்களுக்கு முன் ‘உதயன்’ பத்திரிகைக்கு அமைச்சர் திஸ்ஸவிதாரண வழங்கியிருந்தார். அதேபோன்று வாசுதேவநாணயக்காரவும் இவ்வாறான கருத்தொன்றை தமிழ் பத்திரிகையொன்றிற்கு வழங்கியிருந்தார்.

அத்துடன் இவ்வாறான கருத்துகைளயே கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், ஆகியோர் மற்றும் புலம்பெயர் தமிழர்களும் வெளியிடுகின்றனர். இவர்களின் குறிக்கோள் இந்நாட்டை பிளவுப்படுத்தி தமிழர்களின் கனவான தமிழீழத்தை மீள உருவாக்குவதற்கு செயற்படுவதாகும்.

எனவே, புலம் பெயர் தமிழர் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் ஒன்றிணைந்து நாட்டை பிளவுப்படுத்த தமிழீழத்தை மீள உருவாக்கும் நோக்குடன் முனையும் அரசின் அமைச்சர்களான திஸ்ஸ விதாரண மற்றும் வாசுதேவநாணயக்கார போன்றோர் தமிழ் பதிரிகைகளுக்கு இனவாத கருத்துகளை தெரிவிக்கின்றனர். இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

நமது நாட்டை பிளவுப்படுத்த வேண்டுமென்ற நோக்குடன் இலங்கைக்கு இந்தியாவினால் திணிக்கப்பட்ட மாகாணசபை முறைமை, ரணில் -பிரபா ஒப்பந்தம் போன்ற முறைகேடான விடயங்களுக்கு ஆதரவளித்து இந்நாட்டை பிளவுபடுத்த அன்றிலிருந்து செயற்படுபவர்கள் திஸ்ஸ விதாரண மற்றும் வாசுதேவநாணயக்கார ஆகிய இருவருமாவர்.

இவர்கள் இந்நாட்டை பிளவுபடுத்த முயலும் குழுக்களுடன் ஒட்டி உறவாடுவது மிகவும் கவலையளிக்கின்றது. சிங்களவர்களால் போற்றப்பெறும் வாசுதேவ நாணயக்கார நாட்டு மக்களுக்கு இவ்வாறு துரோகமிழைக்கக்கூடாது.

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இந்த நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்தி இந்நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்லும் தருவாயில் இந்த அரசியலிலிருந்துகொண்டே இவ்வாறு செயற்படுவதை எங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே நாட்டை பிளவுப்படுத்த எண்ணுவோருக்கு எதிராக உரிய நடவடிக்கையை ஜனாதிபதி எடுக்கவேண்டுமென்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply