ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பிற்பகல் 1 மணிக்கு பின்னர் தீர்ப்பு

தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா பதவி வகித்தபோது கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை அவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடிக்கு சொத்து சேர்த்ததாக, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு தொடர்ந்தனர். சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர். முதலில் இந்த வழக்கு விசாரணையை சென்னையில் அமைக்கப்பட்ட தனிக்கோர்ட்டு விசாரித்து வந்தது. கடந்த 2003-ம் ஆண்டு நவம்பர் 18-ந் தேதி சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை கர்நாடக மாநிலத்துக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.இந்த வழக்கில் தனிக்கோர்ட்டு நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா முன்னிலையில் இறுதி வாதத்தை முதலில் தொடங்கிய ஜெயலலிதாவின் வக்கீல் குமார், 25 நாட்கள் வாதாடி பல்வேறு முக்கியமான தகவல்களை,
விவரங்களை எடுத்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து சசிகலாவின் வக்கீல் மணிசங்கர் 9 நாட்களும், சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் சார்பில் ஆஜரான வக்கீல் அமித் தேசாய் 8 நாட்களும் வாதிட்டனர். அரசு வக்கீல் பவானிசிங் 9 நாட்கள் வாதிட்டார். கடந்த ஆகஸ்டு மாதம் 28-ந் தேதியுடன் இறுதி வாதம் நிறைவடைந்ததை அடுத்து செப்டம்பர் 20-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா அறிவித்தார்.

இந்த நிலையில், ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றில் பாதுகாப்பு கருதி தனிக்கோர்ட்டை பரப்பன அக்ரஹாராவுக்கு இடமாற்றம் செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி
ஜான் மைக்கேல் டி.குன்கா வழக்கு ஆவணங்களை மாற்றம் செய்யவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் வசதியாக காலஅவகாசம் தேவைப்பட்டதால் வழக்கின் தீர்ப்பை 27-ந் தேதிக்கு (இன்று) தள்ளிவைத்து
உத்தரவிட்டார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா “இசட்-பிளஸ்” பாதுகாப்பு பிரிவில் இருக்கிறார். எனவே அவருக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் இருந்து இன்று காலை 8.30 மணிக்கு தனி விமானத்தில் புறப்பட்டு பெங்களூர் சென்றார்.

காலை 9.50 மணியளவில் இவ்வழக்கின் தீர்ப்பை வழங்கவுள்ள நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட் வளாகத்தை வந்தடைந்தார்.

சுமார் 10 மணியளவில் பெங்களூர் எச்.ஏ.எல். விமான நிலையத்தில் ஜெயலலிதாவின் தனி விமானம் தரை இறங்கியது. அவரை தமிழக நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் வரவேற்றனர். பின்னர், அங்கிருந்து ஓசூர் நெடுஞ்சாலை வழியாக கார் மூலம் அவர் தனிக்கோர்ட்டுக்கு  வந்தார்.

தனிக்கோர்ட்டு அமைந்துள்ள பகுதியில் சுமார் 6 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தனிக்கோர்ட்டை சுற்றிலும் 5 அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதிக்குள் வாகனங்கள் எதுவும்
அனுமதிக்கப்படவில்லை. செல்போன் சேவைகளும் சில மணி நேரத்துக்கு முடக்கப்பட்டிருந்தது

பெங்களூர் நகரத்துக்குள் தமிழகப் பதிவு எண்களை கொண்ட வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.மேலும் பெங்களூர் நீதிமன்றத்தையொட்டிய சுமார் 3 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு 144 தடை உத்தரவு
பிறப்பிக்கப்பட்டிருந்தது.

தனிக்கோர்ட்டு அமைந்துள்ள கட்டிடப் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவை போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள கடைகள் காலையில் இருந்தே
திறக்கப்படவில்லை.

கோர்ட்டுக்கு செல்லும் வழியில் உள்ள வெளிவட்டப் பாதையில் ஜெயலலிதாவை வரவேற்று கர்நாடக அ.தி.மு.க. தலைவர் புகழேந்தி பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.சொல இடங்களில் டிஜிட்டல் பேனர்களும் வைக்கப்படிருந்தன.

சுமார் 11 மணியளவில் நீதிபதியின் முன்னர் ஜெயலலிதா ஆஜர் ஆனார். பரபரப்பு வாய்ந்த இவ்வழக்கின் தீர்ப்பை தமிழ்நாட்டு மக்கள் மட்டுமின்றி, இந்தியா முழுவதுமே ஆவலுடன் எதிர்பார்த்திருந்தது. போலீசாரால்
அனுமதிக்கப்படிருந்த பகுதியில் தேசிய ஊடகங்களைச் சேர்ந்த ஏராளமான நிருபர்கள், கேமரா, மைக் சகிதமாக பரபரப்பாக காத்திருந்தனர்.

அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் தமிழக மந்திரிகள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பா.மோகன் ஆகியோர் காரை விட்டு இறங்கி நடந்துச் செல்ல நேரிட்டது.

பச்சை நிற சேலை அணிந்து ஜெயலலிதா கோர்ட் வளாகத்துக்குள் நுழைந்ததும், பலத்த பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல் கோர்ட் வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் குவியத் தொடங்கியதால் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் சற்று சிரமப்பட்டனர். ஒரு கட்டத்தில் லேசான தடியடி நடத்த வேண்டிய சூழ்நிலையும் நேரிட்டது.

ஜெயலலிதாவுடன் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் நீதிபதியின் முன்னர் ஆஜராகினர். சுமார் 11 மணியளவில் நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா,தீர்ப்பை வாசிக்க தொடங்கினார்.  அப்போது கோர்ட் அறையில் இருந்து வெளியே வந்த சில வக்கீல்கள் இவ்வழக்கின் தீர்ப்பு பிற்பகல் 1 மணிக்கு பின்னர் வெளியாகும் என்று தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply