அரசியலமைப்பில் புதிய பிரச்சினைகள் தோன்றலாம்:ரணில்
மூன்றாவது முறையாக தனக்கு போட்டியிட முடியுமா என்பது தொடர்பில் நீதிமன்ற ஆலோசனையை ஜனாதிபதி பெறுவதினூடாக அரசியலமைப்பில் புதிய பிரச்சினைகள் தோற்றுவிக்கப்படும். இவ்வாறு உயர் நீதிமன்றத்திடம் ஜனாதிபதி விளக்கம் கோரியுள்ளமை வேடிக்கையானது ஆகும். இதன் மூலம் ஜனாதிபதிக்கான அதிகாரங்களும் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டுள்ளன என்று எதிர்க்கட்சி தலைவரும் ஐ.தே.காவின்.தேசிய தலைவருமான ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தினார்.அரசியலமைப்பு திருத்தத்தினாலேயே இத்தகைய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக நிறைவேற்று அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நுகேகொட இளைஞர் கழகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தான் மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது தொடர்பில் உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியுள்ளார்.
அரசியலமைப்பின் 17ஆவது திருத்த சட்டத்தை நீக்கி 18 ஆவது திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டமையே இத்தகைய பிரச்சினைகளுக்கு மூல காரணமாகும்.
இந்நிலையில் ஜனாதிபதி உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியமையினூடாக அரசியலமைப்பில் புதிய பிரச்சினைகள் தோற்றுவிக்கப்படலாம்.
எனவே அதிகாரத்தை தக்க வைத்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையையும் துஷ்பிரயோகம் செய்கிறார்.
முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வாவின் கூற்றினை மையமாக கொண்டு தானே உயர் நீதிமன்றத்திடம் ஆலோசனை கோருவது உரிய தீர்வல்ல.
ஆகையால் ஜாதிக ஹெல உறுமயவினால் முன்வைக்கப்பட்ட 19 திருத்த சட்டத்தை அடுல்படுத்துவதனூடாகவே இப்பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும்.
ஜனாதிபதி இவ்வாறு நீதிமன்றத்திடம் விளக்கம் கோருவது வேடிக்கையாகவுள்ளது.
எவ்வாறாயினும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷ வின் தோல்வி உறுதி செய்யப்பட்டு விட்டது. தற்போது மக்கள் வாழ வழியின்றி தவிக்கின்றனர்.
எனவே இந்த சர்வாதிகார ஆட்சியின் மீதான மக்களின் எதிர்ப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply