ஜனாதிபதியை ஒதுக்கிவிட்டு அதிகாரங்களை கைப்பற்றுவதற்கு பிரதமர் ரணில் முயற்சி

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முற்றாக நீக்கி அதிகாரங்களை பிரதமரின் கைகளில் ஒப்படைக்க நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் , மக்களின் ஆதரவில்லாது பிரதமராகியுள்ளதை ரணில் விக்ரமசிங்க மறந்துவிட வேண்டாம் என அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார் . அடுத்த அரசாங்கத்தில் ரணில் பிரதமராவது கடினமான விடயமேயாகும். அதற்காகவே தொடர்ந்தும் தேசிய அரசாங்கத்தை வலுப்படுத்த நினைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார் .
பொதுத் தேர்தலுக்கு பின்னரும் தேசிய அரசாங்கத்தை அமைக்க ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தி வருகின்ற நிலைமையில் ஜாதிக ஹெல உறுமயவின் நிலைப்பாட்டினை வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் . அவர் தொடர்ந்தும் கூறியதாவது ,
ஜனாதிபதி முறைமையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டியது அவசியமானது , சர்வாதிகார போக்கில் பயணிக்கும் ஜனாதிபதி முறைமையை ஜனநாயக பாதையில் கொண்டுசெல்லவே நாம் தேசிய அரசாங்கம் எனும் கூட்டணிக்கு ஆதரவு வழங்கினோம் , இதில் 19ஆவது திருத்தத்தினை கொண்டுவந்து அதனூடாக ஜனாதிபதி முறைமையினை மாற்றியமைக்க வேண்டும் என்ற இணக்கப்பாடு எட்டப்பட்டது.
ஆனால், எந்தவொரு சந்தர்ப்பதிலும் ஜனாதிபதியின் அதிகாரங்களை முழுமையாக நீக்கி அதை பிரதமர் கைகளில் ஒப்படைக்க யாரும் இணங்கவும் இல்லை, தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடவும் இல்லை , ஆனால் இப்போது 19ஆவது திருத்த சட்டமூலத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சிக்கு சாதகமான வகையில் ஜனாதிபதி முறைமையினை மாற்றிக்கொள்ள முயற்சிக்கின்றனர் . நாம் எந்த சந்தர்ப்பதிலும் நிறைவேற்று ஜனாதிபதி முறையினை நீக்கி அதை பிரதமர் கைகளில் கொடுக்க அனுமதிக்கமாட்டோம் . இப்போது கொண்டுவரப்பட்டுள்ள 19 ஆவது திருத்த சட்ட மூலத்தில் தேர்தல் முறைமையில் மாற்றம் ஏற்படுத்துவது , சுயாதீன ஆணைக்குழுவின் செயற்பாடுகளை பலப்படுத்துவதென பல விடயங்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்தையும் தவிர்த்து ஜனாதிபதி முறைமையில் மாற்றத்தினை கொண்டுவர நினைப்பதால் மட்டும் நாட்டில் மாற்றங்கள் ஏற்படப்போவதில்லை.
மேலும் ஐக்கிய தேசியக் கட்சி மிகப்பெரிய சதி வலையினை பின்னுகின்றது. இதில் மைத்திரிபால சிறிசேனவை தள்ளி அதிகாரங்களை தம் வசப்படுத்தும் நோக்கத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வின் செயற்பாடுகள் அமைந்துள்ளன எனவே அதை முறியடிக்க வேண்டும்.
அதேபோல் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை முற்றாக நீக்குவதில் மாற்றங்களையும் கொண்டுவர வேண்டும் , இவ் விடயங்கள் தொடர்பில் நேற்று கூடிய தேசிய நிறைவேற்று சபையிலும் சுட்டிக்காட்டினோம் . எனவே எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் சரியான முறையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட 19 ஆவது திருத்தச்சட்டம் முன்வைக்கப்பட வேண்டும் . இல்லையேல் அதை தோற்கடிக்கும் சகல நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம் .
மக்களின் ஆதரவில்லாது ரணில் விக்ரமசிங்க பிரதமராகியதால் அப் பதவியினை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கின்றார். அதற்கு நாம் இடம் கொடுக்கப் போவதில்லை . மக்களின் முழுமையான ஆதரவுடன் ரணில் பிரதமர் ஆவாரெனின் அதை நாம் தடுக்க முடியாது , அவ்வாறு செயற்படுவது ஜனநாயகத்திற்கு எதிரானதும் கூட , ஆனால் மக்களால் தெரிவு செய்யப்படாத நிலையில் வாக்குறுதியின் அடிப்படையில் பிரதமராக மாற்றப்பட்டிருக்கின்றார் . அதை ரணில் விக்ரமசிங்க மறந்துவிடக் கூடாது ,
இன்று தேசிய அரசாங்கம் என்று சொல்லிக்கொள்வதால் மட்டுமே பிரதமர் என்ற அந்தஸ்து ரணில் விக்ரமசிங்க விற்கு கிடைத்துள்ளது. அந்த அந்தஸ்தை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்ளவே அடுத்த முறையும் தேசிய அரசாங்கத்தை அமைக்கும் வகையில் இவரின் கருத்துக்கள் அமைகின்றதெனவும் அவர் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply