பள்ளி, கோவில், சர்ச், மசூதி அருகே உள்ள 500 மதுக்கடைகள் 2 நாளில் மூடப்படும்: அரசிடம் பட்டியல் வழங்கப்பட்டது

tasMark சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று முதல்– அமைச்சர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து முதல்–அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் 5 கோப்புகளில் கையழுத்திட்டார். தேர்தல் வாக்குறுதிப்படி முதல் கட்டமாக மதுக்கடைகள் இயங்கும் நேரத்தை 2 மணி நேரம் குறைத்ததோடு 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் முதல்– அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

 

அதன்படி பதவி ஏற்ற மறுநாளே மதுக்கடைகளின் நேரம் காலை 10 மணிக்கு பதிலாக பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை என குறைக்கப்பட்டது.

 

தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் மூடப்பட வேண்டிய 500 டாஸ்மாக் கடைகளை கண்டறியும் பணி முடுக்கி விடப்பட்டது. பள்ளிகள், கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள், மார்க்கெட்டுகள் போன்ற இடங்களில் செயல்படும் மதுக்கடைகளை மூட முடிவு செய்யப்பட்டது.

 

கடந்த 3 நாட்களாக அதிகாரிகள் மூடப்பட வேண்டிய மதுக்கடைகளின் பட்டியலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

 

தமிழகத்தில் மொத்தம் 6,700 மதுக்கடைகள் உள்ளன. இதில் எந்தெந்த மதுக்கடைகளை மூட வேண்டும் என்பதற்காக டாஸ்மாக் மண்டல மேலாளர்களிடம் இருந்து பரிந்துரை பட்டியல் கேட்கப்பட்டது.

 

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனை, நிர்வாகத்துக்காக 35 மாவட்டங்களாக உருவாக்கப்பட்டன. அதன்படி 35 மாவட்ட மேலாளர்களும், அவர்களின் கீழ் உள்ள துணை மேலாளர்களும் மூடப்பட வேண்டிய டாஸ்மாக் கடைகளின் பட்டியலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

 

இதில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த பள்ளிகள், கோவில்கள், சர்ச்கள், மசூதி, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள், விற்பனை குறைவான இடங்கள், கிராமப்புறங்கள், அருகருகே உள்ள கடைகள் என்ற அடிப்படையில் மாவட்டத்துக்கு 10 முதல் 15 கடைகள் வரை கணக்கெடுத்து உள்ளன. இதன்படி 525 கடைகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டது.

 

இந்த பட்டியலில் இருந்து 500 கடைகளை தேர்வு செய்வதற்காக டாஸ்மாக் மாவட்ட மற்றும் மண்டல மேலாளர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை சென்னையில் நடந்தது. இதில் மூடப்பட உள்ள 500 டாஸ்மாக் கடைகளின் பட்டியல் இறுதி செய்யப்பட்டது.

 

இந்த பட்டியல் அரசின் ஒப்புதலுக்கு இன்று வழங்கப்படுகிறது. ஓரிரு நாளில் அரசு ஒப்புதல் அளித்ததும் 500 டாஸ்மாக் கடைகளும், அதனுடன் இணைந்த பார்களும் மூடப்படும் என்று டாஸ்மாக் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

ஏற்கனவே மதுவிற்பனை நேரம் குறைக்கப்பட்டதால் மொத்த விற்பனையில் 5 முதல் 6 சதவீதம் வரை மதுவிற்பனை குறைந்துள்ளது. ஆனாலும் மொத்த மதுக்கொள்முதலில் மாற்றம் இருக்குமா? என்பதை இனிமேல்தான் கணக்கிட வேண்டும் என்று அதிகாரி மேலும் தெரிவித்தார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply