அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கும் விழா வாடிகனில் நாளை நடக்கிறது
அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கும் விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) வாடிகன் நகரில் நடக்கிறது.20-ம் நூற்றாண்டில் உலக மக்களால் மிகவும் போற்றப்பட்டவர், அன்னை தெரசா. தனது வாழ்நாள் முழுவதையும் ஏழை, எளியவர்கள், நோயுற்றவர்களுக்காக அர்ப்பணித்துக் கொண்ட அவருடைய சேவை இன்றளவும் பாராட்டப்படுகிறது.
உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசாவுக்கு அவர் புரிந்த அற்புதங்களை அங்கீகரிக்கும் விதமாக ரோம் நகரில் உள்ள வாடிகன் புனித பீட்டர் சதுக்கத்தில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) புனிதர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அப்போது போப் ஆண்டவர் பிரான்சிஸ், அன்னை தெரசாவை புனிதர் பட்டம் பெற்றவராக அறிவித்து சிறப்பு செய்கிறார்.
இந்த விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து தலைவர்கள், பேராயர்கள், பக்தர்கள் என லட்சக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.
1910-ம் ஆண்டு அல்பேனிய பெற்றோருக்கு பிறந்த அன்னை தெரசா 1929-ம் ஆண்டு அயர்லாந்தின் லொராட்டா சகோதரிகள் சபையின் ஆசிரியையாக இந்தியாவின் டார்ஜிலிங் நகருக்கு பணிபுரிய வந்தார். கன்னியாஸ்திரியான அவர் அதில் பல வருடங்கள் பணியாற்றினார்.
பின்னர், அன்னை தெரசா 1950-ல் “மிஷனரிஸ் ஆப் சாரிட்டிஸ்” என்னும் சேவை அமைப்பை கொல்கத்தாவில் தொடங்கினார். இந்த அமைப்புக்கு இன்று 133 நாடுகளில் கிளைகள் உள்ளன. 5 ஆயிரம் பேர் இதில் பணிபுரிகின்றனர்.
ஏழை, எளியவர்கள் மற்றும் எச்.ஐ.வி., எய்ட்ஸ், தொழுநோய், காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்னை தெரசாவின் சேவை 47 ஆண்டுகள் தொடர்ந்தது. 1997-ம் ஆண்டு செப்டம்பர் 5-ந்தேதியன்று இறுதி மூச்சு நிற்கும் வரை அன்னை தெரசா, தன்னை சேவையில் ஈடுபடுத்திக் கொண்டார். அவருடைய நினைவு தினத்தையொட்டித்தான் அவருக்கு புனிதர் பட்டம் அளிக்கும் விழா வாடிகன் நகரில் நடக்கிறது.
இந்த விழாவில் இந்திய அரசு சார்பில் மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் தலைமையில் 12 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு கலந்து கொள்கிறது. இந்த குழுவினர் நேற்று டெல்லியில் இருந்து ரோம் நகருக்கு விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றனர்.
இதேபோல், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும் இந்த விழாவில் கலந்து கொள்கிறார். இதற்காக அவருடைய தலைமையிலான 12 அதிகாரிகள் கொண்ட குழு நேற்று விமானம் மூலம் கொல்கத்தாவில் இருந்து புறப்பட்டுச் சென்றது.
இதுபற்றி மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் பதிவில், “மிஷனரிஸ் ஆப் சாரிட்டிஸ் அழைப்பின் பேரில் வாடிகனுக்கு செல்கிறேன். அன்னை தெரசா மனிதாபிமானத்தின் அன்னை. அவர் இந்த உலகிற்கு மனித நேயத்துடன் ஆற்றிய சேவைகள் அளவற்றவை. அவர் கொல்கத்தாவில் தங்கியிருந்து சேவையாற்றியதற்காக மிகவும் மகிழ்ச்சி கொள்கிறோம்” என்று குறிப்பிட்டு உள்ளார்.
வருகிற 5-ந்தேதி வரை வாடிகன் நகரில் தங்கியிருக்கும் மம்தா பானர்ஜிக்கு, ரோம் நகரின் முதல் பெண் மேயரான வெர்ஜினீயா ராக்கி சிறப்பு வரவேற்பு அளிக்கிறார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply