டாக்கா நகரில் ஓட்டல் தாக்குதலுக்கு துணையாக இருந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை
வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் ‘ஹோலே ஆர்டிசன் பேக்கரி’ என்ற ஓட்டலில் கடந்த மாதம் 1–ந் தேதி பயங்கரவாதிகள் புகுந்து துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய பெண் ஒருவர் உள்பட 22 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் 6 பேர் கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதலின் பின்னணியில் மூளையாக இருந்து செயல்படுத்தியவர் என கூறப்படுகிற ஜே.எம்.பி. என்னும் ஜமாயதுல் முஜாகிதீன் பங்களாதேஷ் இயக்கத்தின் தலைவன் தமிம் சவுத்ரி (வயது 30), கடந்த 27–ந் தேதி, டாக்காவில் போலீசாருடனான துப்பாக்கிச்சண்டையில் கொல்லப்பட்டார்.
அவரது கூட்டாளிகள் 2 பேரும் இந்த தாக்குதலில் உயிரிழந்தனர்.இந்த நிலையில், டாக்கா ஓட்டல் குண்டுவெடிப்பில் சதித்திட்டம் தீட்டவும், தாக்குதல் நடத்தவும் பக்கபலமாக இருந்த முராத் என்ற மேஜர் முராத், டாக்காவில் ரூப் நகர் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்தி, அங்கே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு நம்பகமான தகவல் கிடைத்தது.அதன்பேரில் அந்த வீட்டை போலீசார் நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு சுற்றி வளைத்தனர். அப்போது போலீசாரைப் பார்த்ததும் அவர் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார். போலீசார் பதிலடி கொடுத்தனர்.இறுதியில் இந்த துப்பாக்கிச்சண்டையில் முராத் சுட்டுக்கொல்லப்பட்டார். 3 போலீசார் இந்த சண்டையின்போது படுகாயம் அடைந்தனர். அவர்கள் டாக்கா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply