தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவு திட்டமிட்டதே : பிரபா கணேசன்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு தெரிவித்திருப்பது ஏற்கெனவே எதிர்ப்பார்த்ததும் திட்டமிட்டதுமேயாகும். பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் அரசியல் வேலைத்திட்டத்திற்கமையவே இவை நடைபெறுகின்றது. இருப்பினும் வடகிழக்கு தமிழ் மக்கள் ஒரு போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு செவிசாய்க்க மாட்டார்கள் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.

இது சம்பந்தமாக மேலும் தெரிவித்ததாவது, பல்கலைக்கழக மாணவர்களின் முன்னிலையில் 13 அம்ச கோரிக்கையை உள்வாங்கிக் கொண்டு அதனை ஜனாதிபதி வேட்பாளர்களிடம் விவாதத்திற்கு கொண்டு வராமலேயே சிங்களத்தில் ஒன்றும் தமிழில் ஒன்றுமாய் இருந்த சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்னிறுத்தி அவருக்கு ஆதரவளிக்க முற்படுவது வடகிழக்கு மக்களை ஏமாற்றும் செயலாகும். அது மட்டுமின்றி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளை கலந்தாலோசிக்காமல் எடுத்திருக்கும் முடிவு சுமந்திரனின் அவசரதன்மையை வெளிப்படுத்துகின்றது.

எது எப்படியாயினும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் வாக்குறுதிகளையோ அல்லது கட்டளையினையோ அல்லது நியாயப்படுத்தும் விடயங்களையோ இன்று தமிழ் மக்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கான ஆதரவு இன்று தமிழ் மக்களிடம் இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு சஜித்திற்கு ஆதரவு அளிக்காமல் இருந்திருந்தால் இன்னும் அதிகமாக தமிழ் மக்கள் சஜித்திற்கு ஆதரவு அளித்திருப்பார்கள். அது மட்டுமின்றி சஜித்திற்கு இவர்களின் ஆதரவு காரணமாக தென்னிலங்கை சிங்கள மக்களின் வாக்குகள் எமது ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபயவிற்கு அதிகரிதுள்ளதை உணரக் கூடியதாக உள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அவசர அவசரமான இந்த முடிவு இவர்களை பல விடயத்தில் திருப்தி படுத்தியிருப்பதை உணரக் கூடியதாக இருக்கின்றது. தங்கள் நலனுக்காக இவர்கள் எடுக்கும் முடிவுகள் ஒரு போதும் இம்முறை வெற்றி பெறப் போவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply