சொத்து மதிப்பு பற்றி பொய் சொல்லி மோசடி வழக்கில் சிக்கினார் டிரம்ப்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். 2024-ம் ஆண்டு அங்கு நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட களம் அமைத்து வருகிறார். இந்த நிலையில் டிரம்பும், அவரது பிள்ளைகளும் வங்கிக்கடன்கள் வாங்குவதற்கும், குறைவான வரி கட்டுவதற்கும் ஏற்ற வகையில் டிரம்ப் அமைப்பின் சொத்து மதிப்பில் கோடிக்கணக்கில் பொய் சொல்லி மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக நியூயார்க் மாகாணத்தில் அவர்கள் மீது வழக்கு தொடுத்துள்ளனர். இதுபற்றி அரசு வக்கீல்கள் கூறும்போது, “2011-21 காலகட்டத்தில் டிரம்ப் அமைப்பு ஏராளமான மோசடிகளை செய்துள்ளது” என தெரிவித்தனர். இது தொடர்பாக நியூயார்க் அட்டார்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ் தொடுத்துள்ள வழக்கில் குற்றவாளிகளாக டிரம்புடன் அவரது பிள்ளைகள் டொனால்டு ஜூனியர் இவாங்கா, எரிக் டிரம்ப் மற்றும் டிரம்ப் அமைப்பின் முக்கிய நிர்வாகிகளான ஆலன் வெய்சல்பெர்க் மற்றும் ஜெப்ரி மெக்கனி ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக நியூயார்க் அட்டார்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ் கூறுகையில், “தனது பிள்ளைகள் மற்றும் டிரம்ப் அமைப்பின் மூத்த நிர்வாகிகள் உதவியுடன் டொனால்டு டிரம்ப் அநியாயமாக தன்னை வளப்படுத்திக்கொள்ளவும், அரசு அமைப்புகளை ஏமாற்றவும், தனது சொத்தின் நிகர மதிப்பை பில்லியன் கணக்கான டாலர்களை பொய்யாக உயர்த்தி கூறி உள்ளார். டிரம்பின் சொந்தக் குடியிருப்பான டிரம்ப் டவர் மதிப்பு 327 மில்லியன் டாலர் (சுமார் ரூ.2,616 கோடி)என கூறி உள்ளனர்.
ஆனால் இந்த தொகைக்கு நெருக்கமாக நியூயார்க்கில் எந்த அடுக்கு மாடி குடியிருப்பும் விற்கப்படவில்லை” என தெரிவித்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை “இது மற்றுமொரு சூனிய வேட்டை” என்று கூறி டிரம்ப் நிராகரித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply