தமிழர் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் வருகை திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றதா:சாணக்கியன்

வடக்கு கிழக்கை பொறுத்த வரையில் சுற்றுலாப்பயணிகளின் வருகை மிக குறைவாக உள்ளதோடு இது திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றதா என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார்.

குறித்த விடயத்தினை நேற்று (18.06.2024) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே மேற்கண்டவாறு வினவியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், “வடக்கு கிழக்கினை பொறுத்த வரையில் இன்று சுற்றுலாப்பயணிகளின் வருகை மிக குறைவாக உள்ளது. கிழக்கு மாகாணத்தின் அறுகம்பே பிரதேசத்தில் அரசாங்கத்தின் எந்த முன்னேற்றகரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத போதும், சுற்றுலாப் பயணிகள் அங்கு வருகை அங்கு அதிகமாகக் காணப்படுகின்றது. ஏனெனில் அங்கு நீர் விளையாட்டிற்குரிய (Surfing) கடல்வளம் காணப்படுவதாலாகும்.

இந்நிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போக்குவரத்து இன்று பிரதானமான பிரச்சினையாக உள்ளது. யாழ்ப்பாணத்தினை பொறுத்த வரையில் பலாலி விமான நிலையம் ஊடாக சில சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் சூழல் உள்ளது.

இதேவேளை மட்டக்களப்பில் உள்ள விமான நிலையம் கடந்த காலத்தில் இயங்கு நிலையில் இருந்தாலும் தற்போது மாவட்டத்தினுள் விமானங்கள் தரையிறங்குவதில்லை. இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.

இதற்கிடையில் மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் போன்ற கரையோர பிரதேசங்களை சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையானதொரு சுற்றுலா மையமாக மாற்றுவதற்கான முன்மொழிவுகளை நாங்கள் வழங்கியுள்ளோம். இன்று வரை அதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த சூழ்நிலையில், இன்று பரவலாக பேசப்படும் விடயம் யாதெனில் VFS என்ற தனியார் நிறுவனம் சுற்றுலாப் பயணிகளுடன் தொடர்பான நிதி மோசடியினை மேற்கொள்கின்றது.

இதற்கு பின்புலக் காரணிகளாக அமைச்சர்கள் இருக்கக் கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது. எவராக இருந்தாலும் இலங்கைக்குள் வருவதற்கு விசா (Visa) விண்ணப்பத்திற்கு கட்டணம் செலுத்தினால் VFS என்ற நிறுவனத்தினால் அரசாங்கத்திற்கும் அந்தப் பணம் இல்லாமலாக்கப்படுகின்றது.

இதற்கிடையில், பொலன்னறுவையில் இருந்து மட்டக்களப்பிற்கு புகையிரதம் வருவதற்கு 2 வருடங்களுக்கு முன்னர் நாங்கள் எடுத்த முயற்சியினால் விசேட எக்ஸ்பிரஸ் தொடருந்து (Express Train) மட்டக்களப்பிற்கு வருகின்றது.

இந்த சூழ்நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் 20ம் திகதி இலங்கை வரவிருப்பதை செய்திகள் மூலம் அறிய முடிகின்றது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நிலத் தொடர்பினை ஏற்படுத்துவது, புகையிரத சேவையினை ஆரம்பிப்பது மிக முக்கிய விடயமாக உள்ளது.

ஏனெனில் தென்னிந்தியாவில் உள்ள எங்களது தமிழ் சகோதர மக்களில் குறிப்பிட்ட தொகையினர் இலங்கைக்கு வந்தால் வடக்கு, கிழக்கினை எம்மால் கட்டியெழுப்ப முடியும். ஆகவே அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

இந்நிலையில், ஜனாதிபதிக்கு தமிழ் மக்களின் ஆதரவு கிடைக்க வேண்டுமாயின் அவர் தமிழ் மக்களுக்கு கூறும் சில விடயங்களையாவது செய்ய வேண்டும்.

இவற்றினை மேற்கொள்ளாது செயற்படுவதனால் தமிழ் மக்களை ஏமாற்றுவதனையே தனது நோக்கமாக கொண்டுள்ளார் என்பதை நாங்கள் எண்ண முடியும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply