மாயைகளை உணர்த்தும் ஆண்டாக புத்தாண்டு மலரட்டும் : டக்ளஸ் தேவானந்தா

மாறுதல்கள் எதனையும் இதுவரை தந்துவிடாத மாற்றத்துடன் கடந்திடும் 2024 ஆம் ஆண்டிற்கு விடை கொடுத்து, மாயைகளை உடைத்து யதார்த்தங்களை அடையாளம் காட்டும் ஆண்டாக அமைய புத்தாண்டை வரவேற்போம் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் புத்தாண்டு செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

“கொறோனா பெரும் தொற்றும் பொருளாதார நெருக்கடியும் ஏற்படுத்திய சுமைகளை சுமந்து கொண்டிருந்த மக்கள் மத்தியில் ‘மாற்றம்’ பற்றிய பேச்சுகள் தீயாய் பற்றிக் கொண்ட ஆண்டாக 2024 அமைந்திருந்தது.

வாக்குகளை வாரி அள்ளிக்கொள்ள இனவாதம் இனிமேலும் வசதியான ஆயுதம் அல்ல என்பதை உணர்ந்து கொண்டவர்கள், ‘மாற்றம்’ என்ற வார்த்தைக்கு மகுடம் சூட்டினார்கள்.

கழுத்தை நெரிக்கும் சுமைகளில் இருந்து மீள்வதற்கான “ஒரு சந்தர்ப்பத்தினை கொடுத்துதான் பாரப்போமே” என்ற பரிசோதனை முயற்சிக்கு எமது மக்களும் முன்வந்தமையினால் சில மாற்றங்களை 2024 எம் மத்தியில் பிரசவித்திருந்தது.

ஆனால், எமது மக்களை சித்திரவதை செய்யும் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு சரியான வழிமுறை என்று நாம் அடையாளப்படுத்தியவையும், முன்னெடுத்தவையுமே, யதார்த்தமான அணுகுமுறைகள் என்பதை தொடரும் சம்பவங்கள் அடுத்தடுத்து அம்பலப்படுத்தி வருன்றன.

எனவே, பிறந்திருக்கும் புதிய ஆண்டு, எம்மக்களை சூழ்ந்திருக்கும் மாயைகளை முழுமையாக உடைத்து, சரியானவர்களையும் சரியானவற்றையும் அடையாளம் காட்டும் என்ற நம்பிக்கையுடன், அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply