இந்தியாவுடனான ஒப்பந்தங்கள் சட்டவிரோதமானவை : உதய கம்மன்பில

இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள மின்சக்தி மற்றும் எரிபொருள் தொடர்பான திட்டத்துக்காக இலங்கை வரும் இந்தியர்களுக்கு, ஜனாதிபதிக்கு நிகரான விடுபாட்டுரிமைகள் வழங்கப்படவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு இதனைக் குறிப்பிட்ட அவர்,

இந்தியாவுடன் கைச்சாத்திட்ட 7 திருட்டு ஒப்பந்தங்களில் இரண்டின் உள்ளடக்கங்களைத் தாம் அண்மையில் வெளிப்படுத்தியதாகத் தெரிவித்தார்.

அதில் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான எண்ணெய் குழாய் இணைப்பு தொடர்பான முத்தரப்பு ஒப்பந்தத்தின் 7 ஆவது சரத்தில், இந்த ஒப்பந்தம் தொடர்பான வேலைத்திட்டத்தில் பங்குபற்றும் இந்தியர்களுக்கும், அதில் இந்திய அரசாங்கத்துக்காக பணியாற்றும் இலங்கையர்களுக்கும் எதிராக, வழக்கு தொடரமுடியாது என்ற விடுபாட்டுரிமை வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று, மதுரைக்கும், மன்னாருக்கும் இடையிலான மின்சார பரிமாற்றத் திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தின் 7 ஆவது சரத்திலும் இத்தகைய விடுபாட்டுரிமை தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்த வேலைத்திட்டங்களால் ஏற்படும் சூழல் பாதிப்புக்கள் அல்லது வேறு சில விடயங்கள் தொடர்பிலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள தரப்பினருக்கு எதிராக வழக்கு தொடர முடியாது.

இலங்கையின் சட்டத்துக்கமைய, நாட்டின் முதல் குடிமகனான ஜனாதிபதி மாத்திரமே இத்தகைய விடுபாட்டுரிமைக்கு உரித்துடையவராவார்.

எனவே, அரசியலமைப்பின் 12 (1) சரத்தின் கீழ், குறிப்பிடப்பட்டுள்ள சட்டத்தின் முன், அனைவரும் சமம் என்ற கருத்து இந்த ஒப்பந்தங்களில் வெளிப்படையாக மீறப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply