கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளுக்கு 24×7 மணி நேர பயணிகள் பஸ் சேவை ஆரம்பம்
விமான நிலையத்துக்கு வருகை தரும் மக்களுக்காக பொதுப் போக்குவரத்து சேவையொன்றின் அத்தியாவசியத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஆரம்ப நடவடிக்கையாக நேற்று (04) முதல் விமான நிலையத்தில் இருந்து கொழும்பு வரை தனியார் பஸ் சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் எவரிவத்தை பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் இந்த பஸ் நேற்று முதல் விமான நிலையத்திலிருந்து ஆரம்பிக்கின்றது. இந்த பஸ் சேவையை 24×7 மணி நேர சேவையாக நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது தனியார் துறையின் பஸ் ஒன்றை சேவையில் ஈடுபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் பயணப் பொதிகளை கொண்டு வரும் வசதிகளுடன் பஸ் சேவை ஒன்றை இந்த சேவைக்கு ஈடுபடுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடித்துவக்கு தெரிவித்தார்.
இந்த சேவையை வழங்கும் பஸ் வண்டிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மக்கள் அபிமான சேவையை வழங்குவதற்காக முறையான பயிற்சி வழங்கப்பட்ட பின்னர் இச்சேவையில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
290 ரூபாய் கட்டணத்திற்கு கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பு நோக்கி அதி சொகுசு வசதிகளுடன் செல்வதற்கான வாய்ப்பு நேற்று முதல் பயணிகளுக்கு கிடைத்துள்ளது.
விமான நிலைய அதிகார சபை, வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை மற்றும் அரசாங்கத்தின் வழிகாட்டலின் கீழ் இத்திட்டத்தை வெற்றிகரமாக ஆரம்பிப்பதற்கு முடிந்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply