இலங்கை மீதான ஐ.நா. தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது சரிதான்: சிதம்பரம்

இலங்கைக்கு எதிராக ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு அளித்தது சரியான முடிவுதான் என்று இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.இந்த தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்தபோது அதனை 15 நாடுகள் எதிர்த்திருந்தன என்றாலும், இந்தியாவின் ராஜீய முயறிகள் மூலம் சவுதி அரேபியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் தமது நிலைபாட்டை எதிர்காலத்தில் மாற்றிக்கொள்ள வைப்பதென்பதும் சாத்தியமே என சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் திறக்கப்படவிருப்பதைப் பாராட்டி தமிழக காங்கிரஸ் கமிட்டி ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றுகையில் அமைச்சர் சிதம்பரம் இக்கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை மீதான தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவளித்தது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சரியான பாதையில் செல்வதென்பதன் அறிகுறி என அவர் கூறினார்.

இறையாண்மை உள்ள தனி நாடு ஒன்றின் மீதான நடவடிக்கை இத்தீர்மானம் என்பதால், இந்தியா அது தொடர்பில் ஒவ்வொரு கட்டத்திலும் கவனமாக செயல்பட்டு முடிவெடுத்தது என சிதம்பரம் குறிப்பிட்டார். இலங்கைக்கும் பிற நாடுகளுக்கும் ஒரு வலுவான சமிக்ஞையை தரும் நோக்கத்தில் இந்தியா இத்தீர்மானத்துக்கு ஆதரவு வழங்கியதாக அவர் கூறினார்.

கூடங்குளம்
கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பில் அரசாங்கம் மக்களின் கவலைகளை செவிமடுத்தது என்றும், ஆனால் நிபுணர் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் மின் நிலையத்தை திறக்க அது முடிவெடுத்துள்ளது என்றும், ஆராய்ந்து எடுக்கப்பட்ட இந்த முடிவிலிருந்து மத்திய அரசு பின்வாங்காது என்றும் சிதம்பரம் தெரிவித்திருந்தார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலுவும் ஈ.வி.கே.எஸ். இலங்கோவனும் இந்தக் கூட்டத்தில் உரையாற்றுகையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உருவாக்கப்படும் அனைத்து மின்சரத்தையும் மத்திய அரசு தமிழக அரசுக்கே வழங்கி தமிழகத்தின் மின் பற்றாக்குறையைப் போக்க வேண்டும் என்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஆமோதித்திருந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply