சகலருக்கும் சுபீட்சம் நிறைந்த ஆண்டாக அமைய வேண்டும் : ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

பிறந்திருக்கும் தமிழ், சிங்கள் புத்தாண்டு சகலருக்கும் சமாதானம், மகிழ்ச்சி மற்றும் சுபீட்சம் நிறைந்த புத்தாண்டாக அமைய வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

இப் புத்தாண்டுப் பண்டிகை மனிதர்களுக்கும் இயற்கைக்குமிடையே குறிப்பிடத்தக்கப் பிணைப்பை ஏற்படுத்தும் ஒரு மிகப்பெரும் தேசிய விழாவாகும்.

புலர்ந்திருக்கும் இப்புத்தாண்டு எமது உள்ளங்களுக்கு புதிய சிந்தனைகளையும் உணர்வுகளையும் கொண்டு வருகின்றது.

அது எமது வாழ்க்கையையும் சமூகத்தையும் புதிய உறுதியுடனும் துணிவுடனும் பார்ப்பதற்கான வழியைக் காட்டுகின்றது. நட்புறவு மற்றும் ஐக்கியத்தினூடாக இப்புத்தாண்டு மேலும் அர்த்தம் நிறைந்ததாக மாறுகின்றது.

எனவே இப்புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது எல்லோருக்கும் மத்தியில் நட்புறவையும் கூட்டுறவையும் கட்டியெழுப்ப எல்லாவகையிலும் முயற்சிப்பது அவசியமாகும்.

இப்புத்தாண்டுடன் இணைந்ததாகக் கடைப்பிடிக்கப்படும் பல்வேறு முக்கிய பாரம்பரியங்கள் குடும்பத்திற்கும் கிராமத்திற்குமிடையேயான ஐக்கியத்தையும் புரிந்துணர்வையும் மேலும் பலப்படுத்துகின்றது.

இந்த ஐக்கியம் தேசிய சுபீட்சத்திற்கான ஒரு மிகமுக்கிய ஊக்க சக்தியாக அமைகின்றது.

நாடு சுபீட்சத்தை நோக்கி முன்னேறி வருகின்ற சூழ்நிலையில் எல்லோரினாலும் சுப நேரத்தில் கடைப்பிடிக்கப்படும் இந்தப் பாரம்பரியங்கள் ஒரு மிகப்பெருமருளாக அமையும். எனவே இப்புத்தாண்டின் பாரம்பரியங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்குமாறு உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கின்றேன்.

இப்புதுவருட காலத்தில் சேவையில் ஈடுபட்டிருக்கும் முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் ஏனைய கடமைகளில் ஈடுபட்டிருக்கும் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியும் சுபீட்சமும் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply